விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் குறுகிய கால பயிர் கடன் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை மானியவட்டியாக 4 சதவீதத்தில் குறுகிய கால பயிர்கடன் வழங்கும் திட்டத்தை நீட்டித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
3 சதவீதம் மானியம்
நடப்பு 2017-18 நிதியாண்டிலும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் குறுகியகால பயிர்கடன் அளிக்கப்பட்டு, கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில் 3 சதவீதம் மானியம் அளிக்கப்படும்.
ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு துறைகளில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்கடனில் வட்டி மானியம் அளிக்க ரூ.20 ஆயிரத்து339 கோடி ஒதுக்கீடு செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
4 சதவீதம் போதும்
இதன்படி, விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டிலும் வங்கிகளில் குறுகிய காலக்கடனாக ரூ.3 லட்சம் வரை கிடைக்கும். இதற்கு 7 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டாலும் முறையாக கடன் செலுத்தும் விவசாயிகள 4 சதவீதம் வட்டி செலுத்தினாலே போதுமானது.
வங்கிகள் தொடர்ந்து விவசாயிகளுக்கு குறுகியகால பயிர்கடனை அளிக்க வேண்டும், முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடியும் அளிக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவுறுத்தி இருந்தது’’ எனத் ெதரிவித்தார்.
கோரிக்கை
உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா மாநில அரசுகள் விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யக்கோரி வருகின்றனர். இதையடுத்து, மத்திய அரசு வட்டி மானியத்துடன் குறுகியக்காலக் கடன் அளிக்கும் திட்டத்தை நீட்டித்துள்ளது.