முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீதான ரூ.40 கோடி ஊழல் வழக்கில் இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது. இதனால், அவரது ஆதரவாளர்களும், பாஜகவினரும் பெரும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்த தீபாவளியை இதுதான் என அவர்கள் கூறுகின்றனர்.

கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பா இருந்தபோது, தனது அரசியல் மற்றும் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, அவரது 2 இரு மகன்கள், மருமகன் உள்பட பலருக்கு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சிபிஐ போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட எதியூரப்பா, அவரது 2 மகன்கள், மருமகன், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், பெல்லாரியைச் சேர்ந்த அதன் நான்கு துணை நிறுவனங்கள் மீது கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில், எதியூரப்பாவின் மகன்கள் ராகவேந்திரா, விஜேந்திரா மற்றும் மருமகன் சோஹன் குமார் ஆகியோரின் வங்கி கணக்குகளில் ரூ.20 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இதுபோக எதியூரப்பாவின் மகன்கள் நடத்தி வரும் பிரேர்னா கல்வி அறக்கட்டளைக்கும் ரூ.20 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.40 கோடியும், சுரங்க ஒப்பந்த அனுமதி தருவதற்காக எதியூரப்பாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுத்த லஞ்சம். இந்தப் பணத்தை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் துணை நிறுவனமான செளத் வெஸ்ட் மைனிங் நிறுவனம் வழங்கியுள்ளது.

மேலும், பெங்களூரு அருகே உள்ள ஒரு ஏக்கர் அரசு நிலத்தை எதியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துக்கும், அவர்களது துணை நிறுவனங்களுக்கும் ரூ.20 கோடிக்கு விற்றதாக கணக்குக் காட்டியுள்ளனர். இது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் எதியூரப்பா குடும்பத்துக்கு கொடுத்த லஞ்சத்தை மூடி மறைக்க நடந்ததாகும்.

உண்மையில் இந்த நிலப் பரிவர்த்தனை சட்டவிரோதமாக நடந்துள்ளது. எதியூரப்பா தனது முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என குறிப்பிட்டு இருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருந்தது. இதில் எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரது அரசியல் எதிர்காலத்தின் நிலை என்னவென்று அவரது ஆதரவாளர்கள் திகைத்தனர். இந்த தீபாவளி பண்டிகை சோகமாக முடியுமோ என்ற நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி அளித்தார். அதில், எடியூரப்பா மீது இருந்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய சாட்சிகளும், ஆதாரங்களும் இல்லை. இதனால், இந்த வழக்கில் இருந்து அவர், விடுவிக்கப்படுகிறார் என கூறப்பட்டது. இதை கேட்டதும், எடியூரப்பா மற்றும் அவரது ஆதரவாளர்கள் குதூகலம் அடைந்தனர். இந்த தீபாவளிக்கு அவர்களுக்கு கிடைத்த பெரிசு என கூறி, கொண்டாடினர்.