திமுக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு
திமுகவின் அரசியல் ஆலோசகரும், அரசியல் வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கடந்த 18-ம் தேதி பிஹார் மாநிலத்தில், 'பாத் பிகார் கி' எனும் பிகார் மாநில வளர்ச்சிக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர், நீக்கப்பட்டபின் தனிப்பட்ட ரீதியில் அவர் தொடங்கிய முதல் பிரச்சாரமாகும்.
இந்த சூழலில், பாடலிபுத்ரா காவல் நிலையத்தில் பிரசாந்த் கிஷோர் மீது சாஸ்வந்த் கவுதம் என்பவர் புகார் அளித்தார். இதில் தனது எழுத்துகளை, தனக்குத் தெரியாமல் எடுத்து மாற்றங்களுடன் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். தன்னுடைய கருத்துகளைத் திருடி 'பாத் பிஹார் கி' என்ற பெயரில் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகிறார் என்று புகாரில் தெரிவித்தார்.
சாஸ்வந்த் கவுதம் என்பவர், கிழக்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் தற்போது புள்ளிவிவர ஆய்வாளராக கவுதம் இருந்து வருகிறார்.கவுதம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் அதிகாரி கமலேஷ்வர் பிரசாந்த் சிங், பிரசாந்த் கிஷோர் மீது ஐபிசி 420 (மோசடி வழக்கு), 406 (நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்