அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக உறுப்பினர் எனக் கூறி வழக்கு தொடர்ந்த சூர்யமூர்த்திக்கு எதிரான எடப்பாடியின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓபிஎஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அதிமுக உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவரும் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு

இந்நிலையில் திண்டுக்கல் சூரியமூர்த்தி வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், திண்டுக்கல் சூரியமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை; வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவர்; ஆகையால் சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

அதிகாரமே இல்லை

அப்போது சூரியமூர்த்தி தரப்பில் அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதிமுக கட்சி விதிகளின் படி உறுப்பினர் அட்டையை வழங்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமே இல்லை. தாம் அதிமுக உறுப்பினர்தான் என வாதிட்டார்.

எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்வானார் என தெரிவிக்கவில்லை. பொதுக்குழு தீர்மானம் மூலம் பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ததற்கு எதிரான வழக்கு செல்லும் என்று கூறியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.