கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் அரபிக் கடலில் மூழ்கியுள்ளது. கப்பலில் இருந்த 24 பேரில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டின் கொடியுடன் கூடிய ஒரு சரக்குக் கப்பல், அரபிக் கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பல் இன்றிரவு 10 மணியளவில் கொச்சியை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விபத்து மற்றும் மீட்புப் பணிகள்

விபத்து நடந்தபோது கப்பலில் 24 பேர் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளை அணிந்து உயிர் தப்பியுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தென்மேற்குப் பருவமழையின் காரணமாகக் கடலில் ஏற்பட்ட பாதகமான சூழலே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

மூழ்கிய கப்பலில் உள்ள கொள்கலன்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் (Sulphur fuel) இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த எரிபொருள் கரை ஒதுங்கும் அபாயம் உள்ளதால், பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

"கரை ஒதுங்கும் கந்தக எரிபொருள் அருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம். மேலும், கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்தப் பொருளையும் அணுக வேண்டாம். இது போன்ற ஏதேனும் பொருளைக் கண்டால், உடனடியாக 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்" என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மூழ்கிய கப்பலில் இருந்த மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் கந்தக எரிபொருள் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.