Asianet News TamilAsianet News Tamil

டெல்லி விவசாயிகள் போராட்டம்: முற்றுகையைத் தடுக்க பேரணிக்கு தடை, எல்லையில் பலத்த பாதுகாப்பு

"நாங்கள் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க விரும்பினோம். ஆனால் அரசாங்கம் நேர்மையாக இல்லை. அவர்கள் நேரத்தை வீணடிக்க விரும்புகிறார்கள்," என்று விவசாயிகள் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.

Borders Sealed, Marches Banned: Delhi Police stop the Farmers march from entering Delhi sgb
Author
First Published Feb 13, 2024, 9:39 AM IST

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக போராட்டம் நடத்தும் விவசாயிகள் இன்று டெல்லிக்கு அணிவகுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். மத்திய அமைச்சர்களுடன் ஐந்து மணிநேரம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு எட்டப்படாததை அடுத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் 'டெல்லி சலோ' அணிவகுப்பை அறிவித்தன. விவசாயிகளின் அணிவகுப்பு டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க டெல்லி காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. சிங்கு, திக்ரி மற்றும் காஜிபூர் எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள் மற்றும் டிராக்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகள் நகருக்குள் நுழைய காவல்துறை ஒரு மாத கால தடை விதித்துள்ளது.

இந்த பகுதிகளில் அதிக மக்கள் கூடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் கான்கிரீட் தடுப்புகள் மற்றும் முட்கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ளன. வர்த்தக வாகனங்களின் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஹரியானாவில் உள்ள அதிகாரிகள் அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருக்ஷேத்ரா மற்றும் சிர்சா உள்ளிட்ட பல இடங்களில் பஞ்சாப் மாநில எல்லைகளை பலப்படுத்தியுள்ளனர். போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க கான்கிரீட் தடுப்புகள், இரும்பு ஆணிகள் மற்றும் முட்கம்பிகள் ஆகியவற்றை பயன்படுத்தி சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மின்சார வாகனங்களுக்கான மானியம் 11,500 கோடியாக உயர்வு! ரூ.1,500 கோடி கூடுதல் மானியம் அறிவிப்பு!

Borders Sealed, Marches Banned: Delhi Police stop the Farmers march from entering Delhi sgb

சண்டிகரில் மத்திய அமைச்சர்களுடனான விவசாயிகளின் சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு நாள் நள்ளிரவு வரை தொடர்ந்தது. உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோருடன் விவசாயிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மின்சாரச் சட்டம் 2020, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் விவசாயிகள் இயக்கத்தின் போது விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது ஆகியவை குறித்து இருதரப்பும் உடன்பாட்டுக்கு வந்தன.

ஆனால், அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க சட்டம் இயற்றுதல், விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் கோரிக்கைகளில் பாதியை எழுத்துப்பூர்வமாக நிறைவேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்தது. நாங்கள் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க விரும்பினோம். ஆனால் அரசாங்கம் நேர்மையாக இல்லை. அவர்கள் நேரத்தை வீணடிக்க விரும்புகிறார்கள்," என்று விவசாயிகள் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.

ஹரியானா பொது மற்றும் தனியார் சொத்து சேதத்திற்கு எதிரான 2021 சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. மாநில உள்துறை, சிவில் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு விதியை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.

250 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் 150 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஆகியவை கடந்த ஆண்டு டிசம்பரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

ஹமாஸ் பிடியில் இருந்து 2 பணயக்கைதிகள் மீட்பு! வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios