ராய்காட்டில் பயங்கர ஆயுதங்களுடன் படகு; துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விளக்கம்!!
மஸ்கட்டில் இருந்து ஐரோப்பிய நோக்கி சென்று கொண்டிருந்த படகு அதிகமான அலை காரணமாக கரையில் ஒதுங்கிவிட்டது என்று ராய்காட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மீட்கப்பட்ட படகு குறித்து மாகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஹரிஹரேஷ்வர் கடற்கரைக்கு அருகே இன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்களுடன் படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடக்கவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது.
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்திருந்த பதிலில், ''16 மீட்டர் நீளமுள்ள படகை மீனவர்கள் கண்டறிந்தனர். உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு படகில் சில வெடிமருந்துகளுடன், மூன்று AK-47 துப்பாக்கிகள் இருந்ததை மீட்டுள்ளனர். படகு ஆஸ்திரேலியப் பெண்ணுக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. மஸ்கட்டில் இருந்து ஐரோப்பா நோக்கி சென்று கொண்டிருந்த படகு அதிக அலை காரணமாக, உடைந்து கடற்கரையில் ஒதுங்கி உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் படகில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்; தீவிரவாத தாக்குதல் சதியா? போலீசார் எச்சரிக்கை!!
அவர் மேலும் கூறுகையில், “மத்திய விசாரணை முகமைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் படை அனுப்பப்படும்” என்றார். மத்திய உள்துறை அமைச்சகமும் மகாராஷ்டிர அரசுடன் இணைந்து விவரங்களை கேட்டறிந்து வருகிறது.
ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஹரிஹரேஷ்வர் கடற்கரை அருகே ஆயுதங்களுடன் படகு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீவர்தன் கடற்கரையில் உள்ள டைவ் ஆகர் கடற்கரைக்கு அருகில் மற்றொரு ரப்பர் படகும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும், விசாரணை நடந்து வருகிறது.