ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து…நீரில் மூழ்கி 14 பேர் உயிரிழந்த பரிதாபம்…
அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் பகுதியில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் பங்கேற்க ஏரியை கடந்து சென்ற குழுவினர்படகு கவிழ்ந்தததில் 14 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்பதற்காக பெண்கள், குழந்தைகள் என 20 க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி மேற்கொண்டனர்.
அளவுக்கு அதிகமாக படகில் ஏற்றப்பட்டதால் பாரம் தாங்காமல் அந்த படகு திடீரென கவிழ்ந்தது. இதில், படகில் சவாரி செய்த அனைவரும் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கினர்.
ஏரியின் நடுப்பகுதியில் படகு கவிழ்வதை கரையில் இருந்து கவனித்த சிலர் உள்ளே சென்று உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 2 குழந்தைகளை உயிருடன் மீட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 8 பேரின் உடல்கள் மீட்டுள்ளதாகவும், 6 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகை சரியாக பரிசோதித்து பார்க்காமல் அதிக நபர்கள் பயணம் செய்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீட்புப் படையினர் மூழ்கிய உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.