மராட்டிய ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இவர் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவராவார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) சார்பில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை பாரதிய ஜனதா கட்சி (BJP) அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் என்ற சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அக்டோபர் 20, 1957 அன்று பிறந்தார்.

1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராதாகிருஷ்ணன் 2023 பிப்ரவரி 18 முதல் 2024 ஜூலை 30 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், 2024 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) மற்றும் 2024 மார்ச் முதல் ஜூலை வரை தெலங்கானா ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) பணியாற்றியுள்ளார்.

தற்போது, 2024 ஜூலை 31 முதல் மகாராஷ்டிர மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி. ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். (RSS) உடன் 1973ஆம் ஆண்டு முதல் தொடர்புடையவர். கட்சி மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது இந்த நியமனம், தென் மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பாஜக அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் உள்ளது.