UP Election Results 2022 : உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலையில் உள்ளது. 

403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. உத்தர பிரதேசம், கோவா மாநிலங்களில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. போட்டி கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி 2வது இடத்தில் உள்ளது.

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலும், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர். தபால் வாக்கு எண்ணிக்கையில் நிஷாத் கட்சி வேட்பாளர் விவேகானந்தா பாண்டே, கட்டா தொகுதியிலும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ரான்விஜய் சிங் ஹட்டா தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான முனைப்பில் உள்ளது.

அக்கட்சி 250க்கும் கூடுதலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி 2வது இடத்தில் எண்ணிக்கையில் (115 இடங்கள்) பின்தொடர்ந்து வருகிறது. மற்றவை 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ்-4, பகுஜன் சமாஜ்-6 இடங்களில் முன்னிலை. ஆம் ஆத்மி கட்சி ஓரிடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. கடந்த 2017ம் ஆண்டு உத்தரபிரதேச தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜ.க. 312 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. உத்தர பிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.

இந்த தேர்தலின்போது, அக்கட்சியின் மூத்த தலைவர்கள், 300 தொகுதிகளுக்கும் கூடுதலான கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைப்போம் என பிரசாரத்தில் கூறி வந்தனர். ஆட்சி அமைப்பதற்கான இடங்களை காட்டிலும் கூடுதலான இடங்களில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. 250 தொகுதிகளுக்கும் கூடுதலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. சற்று சறுக்கலை சந்தித்தபோதும், பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் காணப்படுகிறது.

சர்ச்சைக்குரிய இடங்களான உன்னாவ், ஹத்ராஸ், லக்கிம்பூர் கேரி ஆகிய தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த முறை சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பிடிக்கும் என அகிலேஷ் யாதவ் அதீத நம்பிக்கையுடன் இருந்தார். இந்த அதீத நம்பிக்கை அலட்சியமாக மாறி அவர் தீவிரமாக வேலை செய்யவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எனினும் அவர் போட்டியிட்ட தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுள்ளார். அகிலேஷின் அலட்சியம்தான் சமாஜ்வாதி தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.