- Home
- இந்தியா
- Independence Day: இந்தியாவில் 'இந்த' ஊரில் மட்டும் ஆகஸ்ட் 16 தான் சுதந்திர தினம்! ஏன் தெரியுமா?
Independence Day: இந்தியாவில் 'இந்த' ஊரில் மட்டும் ஆகஸ்ட் 16 தான் சுதந்திர தினம்! ஏன் தெரியுமா?
Independence Day: நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் ஒரு ஊரில் மட்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாப்படுகிறது. இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 16 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் ஊர்
இந்தியாவில் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். ஆனால், பீகாரில் உள்ள பக்ஸர் மாவட்டத்தின் டும்ரான் (Dumraon) நகரத்தில் மட்டும் ஆகஸ்ட் 16-ம் தேதியும் சுதந்திர தினத்தைப் போலவே மிக முக்கியமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. அது ஏன் தெரியுமா?
1942 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு தியாகிகளை கௌரவிக்க, டும்ரான் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16-ம் தேதியைச் சுதந்திர தினம் போலவே கொண்டாடுகிறார்கள். நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ல் கொடியேற்றம், அணிவகுப்பு நடக்கும்போது, இந்த ஊரில் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குத் தனி முக்கியத்துவம் உண்டு.
இதையும் படிங்க:Facts: கரண்ட் கம்பியில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? 99% பேருக்கு தெரியாத ரகசியம்!
7 மாணவர்கள் சுட்டுக்கொலை
1942 ஆகஸ்ட் மாதம், மகாத்மா காந்தியின் 'செய் அல்லது செத்து மடி' என்ற முழக்கம் நாடு முழுவதும் மக்களை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தூண்டியது. குறிப்பாக, ஆகஸ்ட் 11 அன்று பாட்னா செயலகத்தில் 7 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பீகார் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீகிருஷ்ண சரளாவின் 'Indian Revolutionaries' புத்தகத்தின்படி, பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 5,000 பேர் மூவர்ணக் கொடியுடன் டும்ரான் காவல் நிலையத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்களின் நோக்கம், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த அந்தக் கட்டிடத்தில் கொடியேற்றுவதுதான்.
புரட்சி செய்த கபில் முனி
போலீசார் ஊர்வலத்தைத் தடுத்தபோது, மக்கள் நிற்க மறுத்தனர். உடனே போலீசார் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 14-15 வயதே நிரம்பிய இளம் பள்ளி மாணவனான கபில் முனி என்பவர் கொடியை ஏந்திச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து கொடியை ஏந்திய மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆனாலும், மக்கள் பின்வாங்காமல் இறுதியில் போலீசாரை விரட்டிவிட்டு, காவல் நிலையத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியே தீர்த்தனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு, தியாகிகள் உயிர்நீத்த அந்த காவல் நிலையமே ஒரு நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டது. கபில் முனி, கோபால் கஹர், ராம்தாஸ் சோனார், ராம்தாஸ் லோஹர் ஆகிய நான்கு தியாகிகளின் நினைவாக இது கட்டப்பட்டது. 1943-ம் ஆண்டு முதல், உள்ளூர் மக்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி அவர்களின் தியாகத்தை நினைவுகூரத் தொடங்கினர். இந்த வழக்கம் 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.
ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடும் மக்கள்
'தி பெட்டர் இந்தியா' தகவலின்படி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் டும்ரானின் பங்களிப்பை ஏற்று, பீகார் அரசு 2015-ல் இந்த ஆகஸ்ட் 16-ம் தேதி நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. 2017 ஜனவரியில், முதல்வர் நிதிஷ் குமார் அந்த நினைவுச்சின்ன வளாகத்தில் நான்கு தியாகிகளின் சிலைகளைத் திறந்து வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 அன்று, இந்த நினைவிடத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, காவல் துறையினரின் அரசு மரியாதையுடன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஆகஸ்ட் 15-ல் நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, டும்ரான் மக்கள் அடுத்த நாள் கூடி, தங்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த அந்த மாபெரும் தியாகத்தை நினைவுகூர்கிறார்கள்.

