பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், BPL நிறுவன நில ஒப்பந்தம் தொடர்பாக தன்னை இணைத்து போலிச் செய்தி ஒளிபரப்பியதாக ரிப்போர்ட்டர் டிவிக்கு எதிராக ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஊழலை மறைக்கவே இது எழுப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், ஒரு தனியார் செய்திச் நிறுவனமான ரிப்போர்ட்டர் டிவிக்கு (Reporter TV) எதிராக ரூ.100 கோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் சந்திரசேகருக்கு சம்பந்தமே இல்லாத BPL என்ற நிறுவனத்தின் நில ஒப்பந்தத்துடன் அவரது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, தொடர்ச்சியாக போலிச் செய்திகளை ஒளிபரப்பியதன் காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரூ.100 கோடி கோரி நோட்டீஸ்

மும்பையைச் சேர்ந்த RHP பார்ட்னர்ஸ் என்ற சட்ட நிறுவனம் மூலம் ரூ.100 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போலிச் செய்திகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஏழு நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், ரிப்போர்ட்டர் டிவியின் உரிமையாளர் ஆண்டோ அகஸ்டின், ஆலோசனை ஆசிரியர் அருண் குமார், ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஸ்மிருதி பருத்திக்காட், செய்தி ஒருங்கிணைப்பாளர் ஜிம்மி ஜேம்ஸ், மற்றும் திருவனந்தபுரம் பணியகத் தலைவர் டி.வி. பிரசாத் உட்பட ஒன்பது பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

BPL நிறுவனத்தின் விளக்கம்

முன்னதாக, ஊடகங்களில் ஒரு பிரிவினர் கிளப்பிய நில ஒதுக்கீட்டில் முறைகேடு என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது, தவறானது என BPL நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது எழுப்பப்படும் குற்றச்சாட்டு, 2003ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல என்றும், சட்டப்பூர்வமாக செல்லுபடி ஆகாதவை என்றும் BPL லிமிடெட் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ராஜீவ் சந்திரசேகருக்கும் BPL நிறுவனத்திற்கும் எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளோ அல்லது பங்குதாரர் தொடர்புகளோ இல்லை என்றும் BPL தலைமை நிர்வாக அதிகாரி சைலேஷ் முதாலர் உறுதிப்படுத்தினார். இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை மற்றும் திசைதிருப்பக்கூடியவை என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜீவ் சந்திரசேகரின் கருத்து

அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் மெஸ்ஸியின் கேரளா வருகை தொடர்பான ஊழலை மறைக்கவே இந்த சர்ச்சைகள் உருவாக்கப்படுகின்றன என்று ராஜீவ் சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஊடகத் துறையில் சிலர் குற்றவாளிகளாக நுழைந்துள்ளதாகவும், அவர்களை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

தன்னைப்பற்றி பேசப்படும் குற்றச்சாட்டு மெஸ்ஸி வருகை தொடர்பான ஊழலை மூடிமறைப்பதற்காகவே எழுப்பப்படுகிறது என்றும், இதில் உண்மை இல்லை என்றும் கூறிய அவர், BPL நிறுவனமே இது குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அரசியல் உள்நோக்கம் கொண்ட இதுபோன்ற அவதூறு பரப்பும் முயற்சிகளை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு தனது நற்பெயரைக் காக்கப் போவதாகவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.