சீதாமர்கி மாவட்டத்தில் உள்ள புனவுரா தாமில் கட்டப்படவுள்ள சீதா கோயிலின் இறுதி வடிவமைப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார். கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஒரு அறக்கட்டளையும் அமைக்கப்பட்டுள்ளது.
சீதா தேவியின் பிறந்த இடமாக கருதப்படும் சீதாமர்கி மாவட்டத்தில் உள்ள புனவுரா தாமில் கட்டப்படவுள்ள "ஜானகி மந்திர்" (சீதை கோயில்) இறுதி வடிவமைப்பை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.
புனவுரா தாம் ஜானகி கோவிலின் மறுவளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஒரு அறக்கட்டளையையும் அரசு அமைத்துள்ளது.
முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது 'X' சமூக ஊடகப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், "சீதா தேவியின் பிறந்த இடமான சீதாமர்கி புனவுராதாமின் பிரம்மாண்டமான கோவில் மற்றும் பிற கட்டமைப்புகளின் வடிவமைப்பு இப்போது தயாராக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஒரு அறக்கட்டளையும் அமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். கோவிலின் மாதிரியைக் காட்டும் பல படங்களையும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.
விரைவில் பிரம்மாண்டமான சீதா கோவில்:
"சீதாமர்கி புனவுராதாமில் பிரம்மாண்டமான கோவிலின் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாக இருக்கும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாநில அமைச்சரவை சமீபத்தில் சீதா கோயில் வடிவமைப்பு ஆலோசகராக நொய்டாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தை நியமிக்க ஒப்புதல் அளித்தது. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் மாஸ்டர் பிளானிங் மற்றும் கட்டிடக்கலை சேவைகளுக்கான ஆலோசகராகவும் இதே அமைப்பு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
பீகார் அரசு ரூ.120 கோடி ரூபாய் ஒதுக்கீடு:
வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் புனவுரா தாமுக்கு வருகை தருகின்றனர். முன்னதாக, கோவிலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மாநில அமைச்சரவை ₹120 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது.
முதலமைச்சர் நிதிஷ் குமார் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி புனவுரா தாம் சீதா கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். புதிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மாநில அரசு உணவகம், போக்குவரத்து வசதிகள், குழந்தைகள் பூங்கா போன்றவற்றையும் உருவாக்க உள்ளது.
கோயில் அமையும் இடத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர, நுழைவு வாயில்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
