நெல்லித்தோப்பில் பிரச்சாரம் ஓய்ந்தது – கை விரலில் மை வைப்பதில் சிக்கல்
புதுவையில் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.
நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடக்கிறது. காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் உள்பட 8 பேர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது. இடைத்தேர்தலையொட்டி, புதுவையில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.
வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை மாற்றும்போது அழியாத மையை இடது கை ஆள்காட்டி விரலில் வைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பணம் மாற்றுவதற்கு வரும்போது, வங்கிகளில் வலது கை விரலில் மட்டும்தான் மை வைக்கின்றனர். எனவே வாக்குப்பதிவு நடக்கவுள்ள 3 தொகுதிகளின் வாக்காளர்கள், வங்கிகளில் பணம் மாற்றும்போது தெரியாமல்கூட இடது கையில் மை வைக்க வேண்டாம். அவ்வாறு இடது கையில் வைத்தால் வாக்குப்பதிவின்போது வாக்களிக்க முடியாமல் போகலாம் என்றார்.