பெங்களூரு 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தொழில்நுட்ப தலைநகரமாக விளங்கும் பெங்களூருவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளன. தண்ணீர் பற்றாக்குறையால் பெங்களூரு வாசிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. கழிவறையை பயன்படுத்த சிலர் மால்களுக்கு செல்வதாகவும் கூறப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் குடிமைப்பொருள் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெங்களூருவில் தற்போது தினசரி 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது என்று தெரிவித்தார். மேலும் பெங்களூருவில் உள்ள 14,000 ஆழ்துளை கிணறுகளில் 6,900 வறண்டு விட்டன என்றும் அவர் கூறினார்.

பிஆர்எஸ் கட்சியில் இருந்து கே.கவிதா..ஆம் ஆத்மியில் கெஜ்ரிவால்.. அடித்து ஆடும் அமலாக்கத்துறை..

மேலும் தண்ணீர் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான திட்டத்தை வகுக்க அதிகாரிகள் தினமும் ஆலோசனை நடத்த வேண்டு என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் “ பெங்களூருக்கு 2,600 எம்.எல்.டி தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 1,470 எம்.எல்.டி காவிரி ஆற்றிலிருந்தும், 650 எம்.எல்.டி போர்வெல்லில் இருந்தும் வருகிறது. எங்களுக்கு 500 எம்எல்டி பற்றாக்குறை உள்ளது.

காவிரி மற்றும் கபினியில் போதுமான அளவு குடிநீர் சேமிப்பு உள்ளது, இது ஜூன் வரை நீடிக்க போதுமானது. கேஆர்எஸ் அணையில் 11.04 டிஎம்சி, கபினியில் 9.02 டிஎம்சி நீர் சேமிப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

பாம்பு விஷத்தில் மது.. போதை பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த பிக் பாஸ் பிரபலம் - 14 நாள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவு!

மேலும், 313 பகுதிகளில் கூடுதல் ஆழ்துளை கிணறுகளை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும், 1,200 செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்றும், வறண்ட ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குடிசைப்பகுதிகள், போர்வெல்களை நம்பியுள்ள பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க, கர்நாடக பால் கூட்டமைப்பு உட்பட அனைத்து தனியார் தண்ணீர் டேங்கர்களையும் பயன்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்.

குடிநீர் வழங்க அரசிடம் நிதிப் பற்றாக்குறை இல்லை என்றும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாமல் இருக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியில், பெங்களூருவில் கார் கழுவுதல், தோட்டம் அமைத்தல், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றுக்கு குடிநீரைப் பயன்படுத்த கர்நாடக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தடை விதித்துள்ளது.

தட்டுப்பாடு காரணமாக, மாநகரில் உள்ள மக்கள் அதிகளவு தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே 200 தனியார் டேங்கர்களுக்கான கட்டணத்தை நான்கு மாதங்களுக்கு நிர்ணயம் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தி வருகின்றனர். பெங்களூருவில் வசிப்பவர்களில் 60 சதவீதம் பேர் டேங்கர் தண்ணீரை நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.