பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாள்தோறும் விசாரணை? - உச்ச நீதிமன்ற முடிவு ஒத்திவைப்பு
பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமா பாரதி உள்ளிட்டோர் குற்றம்சாட்டுப்பட்டுள்ள பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் நாள் தோறும் விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்த தனது முடிவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு, டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. இந்த இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி,கல்யாண் சிங், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, வி.எச்.பி. தலைவர்ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 19 பேர் மீது கூட்டு சதி செய்ததாக சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
விடுதலை
ஆனால், அவர்களை விடுதலை செய்து 2001-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2010-ல் உறுதி செய்தது.
நிலுவை
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் பாபர் மசூதி ஹாஜி மகமூப்அகமது(இறந்துவிட்டார்) சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.
இரு வழக்குகள்
இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டது தொடர்பான வழக்கு ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் அத்வானி உள்ளிட்ட 13 பேர் விடுக்கப்பட்டனர். அதே சமயம், கட்டிடத்தை இடித்தது தொடர்பான அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோவில் நடந்தது.
இந்த இரு விதமான வழக்கில், பல்வேறு நபர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்குகள் வெவ்வேறு இடத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், இதை ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த முறை உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
எதிர்ப்பு
இந்நிலையில், நீதிபதிகள் பி.சி. கோஷ், ஆர்.எப். நாரிமன் ஆகியோர் முன் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அத்வானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வாதிடுகையில், “ரேபரேலியில் நடந்த வழக்க லக்னோவுக்கு மாற்றி அந்த வழக்குகளோடு இணைத்து விசாரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சி.பி.ஐ. தரப்பில் வாதிடுகையில், “ பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வி.ஐ.பி.கள் மீதான குற்றச்சாட்டுகள் மீண்டும் உயிர்பிக்கப்பட வேண்டும். எந்த வாய்ப்புகளும் வழங்கக்கூடாது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கபில்சிபல்
இந்த வழக்கின் மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கபில் சிபல், லக்னோவில் நடந்த கரசேவகர்கள் வழக்கு, ரேபரேயில் நடந்த வி.ஐ.பி.களுக் கு எதிரான வழக்கை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.
ஒத்திவைப்பு
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பி.சி. கோஷ், ஆர்.எப். நாரிமன் உத்தரவில், “ இந்த வழக்கு ஏற்கனவே 25 ஆண்டுகளைக் கடந்து விட்டது. நீதிவழங்குவதை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை தினந்தோறும் விசாரணை செய்து 2 ஆண்டுகளில் முடிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் வரும் செவ்வாய்கிழமைக்குள் தங்கள் கருத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த இரு வழக்குகளை ஒன்றுசேர்த்து விசாரணை செய்வது குறித்த முடிவு ஒத்திவைக்கப்படுகிறது’’ எனத் தெரிவித்தனர்.