இந்துக்களின் பலனால் கனவை நினைவாக்க அயோத்திக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி..!
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் லக்னோவுக்கு புறப்பட்டார்.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் லக்னோவுக்கு புறப்பட்டார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி, கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது.
இதில், பங்கேற்பதற்காக இன்று காலை 9.35 மணிக்கு டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி லக்னோவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 11.30 மணிக்கு அயோத்தியை அடைகிறார். பின்னர், அயோத்தியில் உள்ள ஹனுமர் கோயிலில் வழிபாடு செய்கிறார். பகல் 12.30 மணிக்கு தொடங்கும் பூஜையில், அடிக்கல் நாட்டுகிறார். பிறகு பாரிஜாத மரத்தை நட்டு, ராமர் பெயரில் சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறார்.
ராமஜென்ம பூமி பகுதிக்கு வாகனத்தில் ஊர்வலமாக வரும் பிரதமருக்கு உள்ளூர் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். பூமி பூஜைக்கு பிறகு பிரதமர் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பூஜையில் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையையொட்டி அயோத்தி முழுவதும் மத்திய, மாநிலப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. எல்லைக்கு சீல் வைக்கப்பட்டு, பூஜை நடைபெறும் பகுதியில் 3,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.