நாட்டில் உள்ள 2.20 லட்சம் ஏ.டி.எம்.களில் 10 சதவீதம் ஏ.டி.எம்.கள் மட்டுமே தற்போது இயங்குகிறது. இதனால், போதுமான அளவு பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

நாட்டில் கருப்பு பணத்தையும், போலி ரூபாய் நோட்டுக்களையும் ஒழிக்கும் நோக்கில், புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார். 

இதையடுத்து, பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூ.500, ரூ.2000, ரூ.100, நோட்டுக்கள் நேற்று முன் தினம் முதல், வங்கிகளிலும், தபால்நிலையங்களிலும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், நாடுமுழுவதும் அனைத்து வங்கிகள், தபால்நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

அதிலும், 2000, 500 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம். மையங்களில் பெரும்பாலும் வரவில்லை. அனைத்துமே 100 ரூபாய் நோட்டுக்களாக மட்டுமே வருகின்றன. இதனால், அதிகமான பணம் ஏ.டி.எம்.களில் இல்லாததால் விரைவாகவே ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் தீர்ந்துவிடுகிறது.

இதனால், வேறு வழியின்றி, தங்கள் கையில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கியின் வாசலில் நீண்ட வரிசையில் வெறுப்புடன் நிற்கத் தொடங்கியுள்ளனர். இதனால், வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. உள்ளது.

நாடுமுழுவதும் 2.22 லட்சம் ஏ.டி.எம்.மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணம் நிரப்புவதற்காக 4 முதல் 5 தனியார் நிறுவனங்கள் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் ஏறக்குறைய பணம் நிரப்பும் 8,800 வாகனங்களும், 35 ஆயிரம் பணியாளர்களும் இருக்கிறார்கள். 2.22 லட்சம் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்ப 35 ஆயிரம் பணியாளர்கள் போதுமானது இல்லை. இதனால், பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம்நிரப்பப்படாமல் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.1000, ரூ.500, ரூ.100 நோட்டுக்களாக வைக்கும் போது, அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை வைக்க முடியும். ஆனால், தற்போது, ரூ.100 ரூபாய் நோட்டுக்களாக மட்டுமே வைக்கப்பட்டு வருவதால், குறைவான அளவு மட்டுமே எந்திரத்தில் வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பணம் வேகமாக தீர்ந்து விடுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, கூறுகையில் “ தற்போதுள்ள நாட்டில் 2.22 லட்சம் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இவற்றில் பணத்தை நிரப்பும் நிறுவனங்கள் 3 முதல் 4 மட்டுமே இருக்கின்றன. 

அதிலும், தற்போதுள்ள ஏ.டி.எம்.களில் பெரும்பாலானவை ரூ. 1000 மற்றும் ரூ.500 நோட்டுக்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, புரோகிராம்செய்யப்பட்டுள்ளது. 100 ரூபாய் வழங்கும் ஏ.டி.எம். மையங்கள் கூட குறைவுதான். அதேசமயம், 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்குவதற்கும் எந்தவிதமான புரோகிராமும், மாற்றங்களும் செய்யவில்லை. ஆதலால், ஏ.டி.எம். மையத்தில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 10 நாட்கள் ஆகலாம்'' எனத் தெரிவித்தார்.