anupam kher appointed as chairman of new film and television institute of India

புனேயில் உள்ள எஃப்டிஐஐ- இந்திய திரைப்பட தொலைக்காட்சி இயக்ககத்தின் புதிய தலைவராக நடிகர் அனுபம் கெர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்னர் இந்தப் பதவியில் இருந்தவர் தொலைக்காட்சி நடிகரான கஜேந்திர சௌஹான். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னதாக, இரு வருடங்களுக்கு முன்னர் கஜேந்திர சௌஹான் புனே திரைப்பட இன்ஸ்டிட்யூட்டுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது, அவரது நியமனத்துக்கு எதிராக மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். 139 நாட்கள் நடந்த புறக்கணிப்புப் போராட்டத்தின் போது, இது, அரசியல் ரீதியான நியமனம் என்று மாணவர்கள் குற்றம் சுமத்தினர். 

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அனுபம் கெர், 500 படங்களும் மேல் நடித்துள்ளவர். நாடக அரங்கில் சிறப்பான இடம் பெற்றவர். கோல்டன் குளோப், ஆஸ்கர் விருது என சர்வதேச விருதுகளைப் பெற்றபடங்களில் பணியாற்றியவர். சர்வதேச விருதுகளையும் பெற்றவர் கெர்.

முன்னதாக, தேசிய நாடகப் பள்ளி (நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ரமா) மற்றும் மத்திய திரைப்பட தணிக்கை அமைப்பு (சிபிஎஃப்ஐ) உள்ளிட்டவற்றின் தலைவராகப் பணியாற்றியவர். 2004ல் பத்மஸ்ரீ விருது, 2016ல் பத்ம பூஷன் விருது உள்ளிட்டவற்றைப் பெற்றவர் அனுபம் கெர். 

புனே திரைப்பட இன்ஸ்டிட்யூட் என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பில், ஷ்யாம் பெனிகல், அடூர் கோபாலகிருஷ்ணன், சயீத் மீரா, மஹேஷ் பட், ம்ருனாள் சென், விநோத் கன்னா, கிரிஷ் கர்னாட் முதலியோர் தலைமை வகித்துள்ளனர். 

புனே திரைப்பட இன்ஸ்டிட்யூட்டில் இருந்து, நசிருத்தீன் ஷா, ஜெயா பச்சன், ஷப்னம் ஆஸ்மி, சத்ருகன் சின்ஹா, ராசா முராட், ரெசுல் பூக்குட்டி, ஸ்மிதா படீல், ஓம் புரி உள்ளிட்ட பிரபலங்கள் வெளிவந்து, பெரிதும் புகழ்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.