Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu apologized to the public
தமது வருகைக்காக பொதுமக்கள் வெயிலில் அவதிபட்டதற்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்த நிகழ்வு அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் அமராவதி நகருக்கு காரில் புறப்பட்டார்.
அப்போது, அவரது பயணத்தால், 2 மணி நேரம் சாலை போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும் போக்குவரத்து வாசிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இதைதொடர்ந்து சாலை நெரிசலில் சிக்கிய பொதுமக்களில் ஒருவர் போலீசாரை நோக்கி கண்டனக்குரல் எழுப்பினார்.
இதைகேட்ட அந்த வழியாக வந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரித்தார்.
அப்போது நீண்ட நேரம் வெயிலில் காத்து கொண்டிருப்பதாகவும் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் எவ்வாறு வெயிலை தாக்கு பிடிக்க முடியும் என்றும் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உடனே அந்த நபரிடம் பொதுமக்கள் முன்னிலையிலேயே பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். இதைபார்த்த பொதுமக்களுக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
