கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் தராத மருத்துவமனை - ஸ்ட்ரெச்சரில் சுமந்து ஆற்றைக் கடந்த உறவினர்கள்
ஒடிசாவில் கர்ப்பிணி ஒருவருக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில், அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆற்றை கடந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வட மாநிலங்களில் நோயாளிகள் மற்றும் இறந்துபோன உடல்களைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வழங்காத நிலை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது ஒடிசாவில் அரிதாகி வருகிறது. ஒடிசா மாநிலம், ராயகடா மாவட்டம் கல்யாண்சிங்பூங்ர தாலுகாவில் தலசாஜா கிராமத்தில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்ணை, கல்யாண்சிங்பூர் மருத்துவமனையில் சேர்க்க அவரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் உதவியைக் கேட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
அந்த கர்ப்பிணிப் பெண்ணும் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது மருத்துவமனையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பதைபதைப்பில் அவரின் உறவினர்கள் இருந்தனர்.
இதனால், அந்த கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து சுமந்து செல்ல உறவினர்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து, ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டு, கர்ப்பிணியை அதில் வைத்து சுமந்து சென்றனர். அந்த பகுதியில் ஓடும் நகபாலி ஆறு ஓடிக் கொண்டிருந்தது.
இதனை அடுத்து, ஸ்ட்ரெச்சரை தலைக்குமேல் தூக்கியவாறு அவர்கள், ஆற்றுகை கடந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கல்யாண்சிங்பூர் மருத்துவமனைக்கு வந்த அந்த பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது.
பல போராட்டங்களுக்கு பின் மருத்துவமனையை அடைந்த இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், இதனைத்தொடர்ந்து தாயும் சேயும் நலமாக உள்ளதாகவும் ஒடிஷா செய்தி தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன.