நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த இன்று அனைத்துக் கட்சி கூட்டம்…..மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்…
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க இருக்கம் நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜான் இன்று கூட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நூலகக் கட்டிடத்தில் நடக்க உள்ள இந்த கூட்டத்தில் மக்களவையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் உள்ள எதிர்க்கட்சிகள் பல்வேறு விஷயங்களை கூறி புயலைக் கிளப்ப திட்டமிட்டுள்ளன.
இந்த சூழலில் அவையை அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சுமூகமாக நடத்த இந்த கூட்டத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றம் கூட உள்ள முதல்நாளில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடக்கறது.
இதனிடையே மக்களவை எம்.பி. வினோத் கண்ணா, மாநிலங்கள் அவை எம்.பி. பி. கோவர்த்தன் ரெட்டி ஆகியோர் சமீபத்தில் மரணமடைந்தனர். இதனால், முதல்நாள் அவை கூடியதும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவை ஒத்திவைக்கப்படலாம். மேலும், வாக்குப்பதிவு ஏற்றார் போலவும் அவை ஒத்திவைக்கப்படுகிறது.
இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மத்திய அரசுக்கு எதிராக, 5 முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து கேள்விகளை எழுப்புவதற்கு 18 எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மத்திய அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவெடுத்துள்ளன.
ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சினைகள், மக்கள் அனுபவித்த கஷ்டங்கள், ஜி.எஸ்.டி. வரி அமல் செய்வதில் மத்திய அரசு காட்டிய அவசரம், விவசாயிகள் தற்கொலை விவகாரம், கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள், தவறான செய்திகளைப் பரப்பி மக்களிடையே பிரிவினையைத் தூண்டுவது ஆகியவை அந்த 5 முக்கிய பிரச்னைகளாகும்.
குறிப்பாக, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோரின் வீடுகளில் அண்மையில் சிபிஐ சோதனை செய்தது. மத்திய அரசின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.