குஜராத் அரசியலில் ஒரு பெரிய மாற்றமாக, முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பாஜகவின் உயர்மட்டத் தலைமையின் உத்தரவின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

குஜராத் மாநில அரசியலில் அதிரடியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள பெரும் அமைச்சரவை மாற்றத்திற்கு (Cabinet Reshuffle) முன்பாக, முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போதைய அமைச்சரவையின் ஒரே உறுப்பினராக முதலமைச்சர் பூபேந்திர படேல் மட்டுமே இருக்கிறார். இது குஜராத் மாநில அரசியலில் ஒரு பெரிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு

தற்போதுள்ள அமைச்சர்களில் 7 முதல் 10 பேர் வரை புதிய அமைச்சரவையிலும் இடம்பெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மீதமுள்ள அனைத்து இடங்களும் புதுமுகங்களால் நிரப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 16 அமைச்சர்களைக் கொண்ட குஜராத் அமைச்சரவை, விரிவாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 26 அமைச்சர்கள் இருப்பார்கள் என்றும் குஜராத் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளவர்களின் ராஜினாமா கடிதங்கள் மட்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படாது என்று கூறப்படுகிறது.

ராஜினாமா கடிதங்கள் ஒப்படைப்பு

முதலமைச்சர் பூபேந்திர படேல் அவர்கள், ராஜினாமா கடிதங்களை முறைப்படி ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் ஒப்படைக்க இன்று இரவு அவரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய குஜராத் அமைச்சரவையின் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் முன்னிலையில் அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

பாஜக தலைமை போட்ட உத்தரவு

அமைச்சர்களின் ராஜினாமா முடிவுக்கு, பா.ஜ.கவின் உயர்மட்டத் தலைமையே காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை முதலமைச்சரின் இல்லத்தில் பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் சுனில் பன்சால் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆகியோர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுனில் பன்சாலும் பூபேந்திர படேலும் ஒவ்வொரு அமைச்சரையும் தனித்தனியாகச் சந்தித்து, பாஜக தலைமையின் முடிவைத் தெரிவித்த பின்னரே அவர்களின் ராஜினாமா கடிதங்களைப் பெற்றுள்ளனர்.

திடீர் அமைச்சரவை மாற்றம் ஏன்?

வரவிருக்கும் தேர்தல்களை மனதில் கொண்டு இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கவும் சாதி மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவத்தை சமநிலைப்படுத்துவதற்கும் பா.ஜ.க. திட்டமிட்டிருப்பதாகப் பார்க்கப்படுகிறது. குஜராத் பா.ஜ.க தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா கட்சித் தலைமை எடுத்த முடிவை அமைச்சர்களிடம் தெரிவித்து, இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்திருக்கிறார்.

இந்த முழுமையான அமைச்சரவை மாற்றத்தின் மூலம் குஜராத் பா.ஜ.க, அடுத்த கட்ட அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான சவால்களுக்குத் தயாராகியுள்ளது.