அமெரிக்காவில் இருந்து ரூ.1.41 கோடி தங்கம் கடத்திய ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவரும் கைதானார்.

Air India Employee Arrested For Smuggling Gold: அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தங்க பிஸ்கட்களை கடத்தியதாக நியூயார்க்கிலிருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானக் குழுவினரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர் ஜூன் 13 அன்று நியூயார்க்கிலிருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானம் AI-116 இன் பணியாளர் ஆவார். அவரிடம் இருந்து சுமார் ரூ.1.41 கோடி மதிப்புள்ள சுமார் 1373 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன.

ரூ.1.41 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மீட்பு

அதிகாரிகளின் கூற்றுப்படி, பணியாளர் குழுவில் ஆரம்பகட்ட சோதனைகளில் எந்த மீட்பும் கிடைக்கவில்லை. இருப்பினும், தொடர்ச்சியான விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தான் பையை மறைத்து வைத்திருந்த இடத்தை வெளிப்படுத்தினார். தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது. முந்தைய சந்தர்ப்பங்களில் இந்தியாவிற்குள் தங்கத்தை கடத்தியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள்

அடுத்தடுத்த நடவடிக்கையில், குழு உறுப்பினர்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் தங்கத்தை கடத்தி வந்த மோசடியின் மூளையாக செயல்பட்ட நபரும் கைது செய்யப்பட்டார். அவரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 1962 சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றவர்களைப் பிடிக்க இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கக் கடத்தலில் பிடிபடுவது இது முதன்முறை அல்ல.

ஏற்கெனவே 2 முறை சிக்கினர்

டிசம்பர் 2024 இல் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், சென்னை விமான நிலையத்தில் 1.7 கிலோ 24 காரட் தங்கத்தை கடத்த ஒரு பயணிக்கு உதவியதற்காக ஏர் இந்தியா கேபின் குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டார். விமானப் பயணத்தின் போது பயணியின் தங்கத்தை அந்த குழு உறுப்பினர் கையாண்டதாகக் கூறப்படுகிறது. மே 2024 இல், கேரளாவின் கண்ணூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானப் பணிப்பெண் சுரபி கதுன், தனது மலக்குடலில் மறைத்து வைத்து சுமார் 960 கிராம் தங்கத்தை கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.