air asia tragedy

என்னப்பா இப்படி பன்றீங்களேப்பா…நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இளைஞர் கைது

டெல்லியில் இருந்து ராஞ்சி நகருக்கு சென்ற ஏர்-ஏசியா விமானத்தின் கதவை நடுவானில் இளைஞர் ஒருவர் திறக்க முயன்றதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகருக்கு திங்கள்கிழமை இரவு 9.50 மணிக்கு ஏர் –ஏசியா நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற விமானம் பயணிகளுடன் புறப்பட்டது. ராஞ்சி விமானநிலையத்தில் தரையிறங்க சில நிமடங்கள் இருக்கையில், 23ம் எண் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென ஓடி விமானத்தின் அவசரக் கதவை திறக்க முயன்றார்.

இதையடுத்து, விமானத்தின் ஊழியர்கள் இதைப்பார்த்து சத்தமிடவே, பயணிகள் உதவியுடன் அந்த இளைஞர் தடுக்கப்பட்டார்.ஆனால், அந்த இளைஞர் சிலரை தாக்கியதில் காயமடைந்தனர். விமானம் ஒருவழியாக தரை இறங்கியதும், அந்த இளைஞர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ விமானத்தின் கதவை திறக்க முயன்று பிடிபட்ட அந்த இளைஞர் பெயர் அப்தாப் அகமது(வயது32). ராஞ்சி நகரைச் சேர்ந்தவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மத்திய விமானப் போக்குவரத்துதுறை அமைச்சகம், விமானத்தின் ஊழியர்கள், பயணிகள், விமானம் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்களை விமானத்தில் பறக்க தடைவிதிக்கும் பட்டியலை தயார் செய்து வருகிறது. இந்த மாத இறுதியில் அந்த பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.