மக்களவை முடக்கப்படுவதை செய்தியாக்குங்கள் - பத்திரிகையாளர்களுக்கு அத்வானி வேண்டுகோள்
மக்களவை அலுவல்கள் தொடர்ந்து முடங்கி வருவதற்கு, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவையை அவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
அப்போது அங்கிருந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமாரிடம் சென்று, மக்களவை தொடர்ந்து முடங்கி வருவதற்கு தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மக்களவையை அவை தலைவரோ அல்லது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரோ நடத்தவில்லை. இருபுறமும் உள்ள கட்சியினர்தான் இதை செய்கின்றனர்' என்றார்.
இதைத் தொடர்ந்து, அத்வானியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அனந்த் குமார் ஈடுபட்டார்.
பின்னர், மக்களவையில் செய்தியாளர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கிய அத்வானி, தனது கருத்துகளை செய்தியாக பிரசுரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.