பணம் நகையுடன் மாயமான நடிகை அர்பிதா முகர்ஜியின் 4 சொகுசு கார்கள்.??? வலைபோட்டு தேடும் அமலாக்கத்துறை.
ஆசிரியர் நியமன வழக்கில் கைதுசெய்யப்பட்ட மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சொகுசு கார்கள் மாயமாகியுள்ளது.
ஆசிரியர் நியமன வழக்கில் கைதுசெய்யப்பட்ட மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சொகுசு கார்கள் மாயமாகியுள்ளது. இந்நிலையில் அந்த சொகுசு கார் குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கார்கள் பணத்துடன் மாயமாகி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதே தீவிரத்திற்கு காரணமாக உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் மம்தாவின் அமைச்சரவையின் மூத்த அமைச்சரும் மம்தாவின் வலது கரமாகவும் இருந்தவர், வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலத்தில் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார், அப்போது ஆசிரியர்கள் நியமனத்தில் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு பணி வழங்கினார் என அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐ வசம் உள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா நக்தலா பகுதியிலுள்ள அமைச்சர் பார்த்தாவின் வீடு மற்றும் அலுவலகம் அவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் வீடு அலுவலகம் என மொத்தம் 21 இடங்களில் சோதனை நடைபெற்றது, இதில் அமைச்சர் பார்த்தாவின் நெருங்கிய உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 21.90 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அர்பிதா முகர்ஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 23ஆம் தேதி கைது செய்தனர், கைப்பற்றப்பட்ட பணம் அமைச்சர் பார்த்தாவுக்கு சொந்தமானது என்றும், ஆசிரியர்கள் நியமன லஞ்சமாக பெறப்பட்ட பணம் என்றும் அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதை அடுத்து பார்த்தா சட்டர்ஜி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது, கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் இரண்டாவது முறையாக நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான பெல்கஞ்யா பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்தனர், அதில் 28.90 கோடி ரொக்கம் 5 கிலோ தங்கம் மற்றும் பல சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணங்கள் அனைத்தும் 2000 ரூபாய் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் ஆகும். கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் பார்சல்களாகவும், மூட்டைகளாகவும் கட்டப்பட்டு இருந்தது. மேலும் அவரது வீட்டில் ஒரு லாக்கர் அறையை உடைத்துப் பார்த்ததில் 1 கிலோ எடையுள்ள 3 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன, அரை கிலோ எடைகொண்ட 6 தங்கக் காப்புகள், தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் ஆன பேனா ஆகியவைகள் கண்டெடுக்கப்பட்டது.
இந்த தங்க கட்டிகள் மற்றும் நகைகளின் மதிப்பு 4.31 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. மொத்தம் இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனையில் அர்பிதா முகர்ஜி வீட்டில் 49.80 கோடி ரூபாய் பணமும் 6 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. ஒரு அமைச்சரின் உதவியாளரின் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பணமும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. எனவே இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில்தான் அர்பிதாவுக்கு சொந்தமான சொகுசு கார்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது, அவருக்கு சொந்தமான ஆடி A4, ஹோண்டா சிட்டி, ஹோண்டா CRV மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட கார்கள் அர்பிதா முகர்ஜி பயன்படுத்தி வந்ததும், தற்போது அந்த கார்கள் திடீரென மாயமாகி இருப்பதும் தெரிந்தது.
இது அதிகாரிகளுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது, அவர் கைது செய்யப்பட்டபோது அவர் பயன்படுத்திய வெள்ளை நிற மெர்சிடஸ் பென்ஸ் காரை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர், இந்நிலையில் மீதமுள்ள நான்கு கார்கள் எங்கே என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் GPRS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.