அபினந்தனை நான்தான் தூக்கி வளர்த்தேன்... எப்படியாவது மீட்டு கொடுங்க... கதறி அழும் உறவினர்....
அபினந்தனை நான்தான் தூக்கி வளர்த்தேன். அவனை இந்திய அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க அவரின் அபினந்தனின் மாமா குந்தநாதன் கூறினார்.
பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்டு விபத்துக்குள்ளான இந்திய போர் விமானத்தில் இருந்த விமானி அபிநந்தன் சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் யஸ்வந்த் நகர் ஜெல்வாய் விஹார் விமானப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரின் பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெம்பாக்கத்தை அடுத்த திருபனைமூர் காஞ்சிபுரத்திலிருந்து 18 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது, அவரது தந்தை வரதமன் அவரும் விமானப்படையிலேயே பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது தாய் மல்லிகா இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது தாத்தாவும் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது பள்ளிப்படிப்பை வடமாநிலத்தில் உள்ள விமானப்படை பள்ளியில் படித்தவர். கடந்த 2004-ல் தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்று தற்போது தனது மனைவி குழந்தைகளுடன் டெல்லியில் உள்ள விமானப்படை குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.
பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிய இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி அபினந்தனின் குடும்பம் சென்னையை அடுத்த சேலையூர் மாடம்பாக்கத்தில் உள்ளது.
சென்னையில் வசிக்கும் அபினந்தனின் உறவினர் குந்தநாதன் பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில்; என்னுடைய மாமா மகன் அபினந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து வைத்திருப்பதாக டிவியில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். அவரின் அப்பாவும் பைலட்தான். நான் தூக்கி வளர்த்த பையன்தான் அபினந்தன். நாட்டுக்காகச் சேவை செய்துவந்தான். அவனை இந்திய அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும். சென்னை மாடம்பாக்கத்தில்தான் அபினந்தன் இருந்தான். அபினந்தனை நல்லபடியாக மீட்டுக்கொடுங்கள். அவனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார் அவரது உறவினர் குந்தநாதன்.