வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய "ஆதார் கட்டாயம்" மத்திய நேர்முக வரிகள் வாரியம் திட்டவட்டம்...
ஜூலை 1-ந்தேதி முதல் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் போது, பான் எண்ணோடு, ஆதார் எண்ணை இணைத்து இருப்பது கட்டாயம், ஆதார் எண்ணை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நேர்முக வரிகள் வாரியம் நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அதேசமயம், பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பான் எண் ரத்து செய்யப்படாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, சலுகை அளித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், பான் எண் பெறவும் வரும் ஜுலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைக்காதவர்களின் பான் எண் செல்லாதது ஆகி விடும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அந்த எண்ணை பான் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும், அதே சமயம் ஆதார் எண் இல்லாதவர்களின் பான் கார்டை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும் ஆதார் எண் இல்லாதவர்களிடம், ஆதார் எண்ணை வழங்குமாறு நிர்பந்தம் செய்யக்கூடாது இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கும் வரை இடைக்கால தடை நீடிக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இதை அடிப்படையாக வைத்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம், அதேசமயம், ஆதார் எண் பெறாதவர்கள், பான் கார்டு எண் மட்டும் அளித்தால், அவர்களின் பான் எண் ரத்துசெய்யப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், மத்திய அரசின் சலுகைகளைப் பெற மக்கள் அனைவரும் ஜூன் 30-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை அனைத்து சமூகநலத் திட்டங்களில் இணைத்து இருக்க வேண்டும்.
ஆதார் எண்ணை பெற முடியாத இடத்தில் புறநகர், கிராமப்பகுதிகளில் இருப்பவர்கள் தொடர்ந்து அரசின் சமூகநலத்திட்ட சலுகைகளை பெறலாம்.ஆனால், அனைத்து வசதிகள் இருந்தும், ஆதார் எண்ணை, சமூகநலத்திட்டங்களில் இணைக்காதவர்களுக்கு, அரசின் சலுகைகள் கிடைக்காது. ஏனென்றால், நாட்டின் 95 சதவீதமக்கள் ஆதார் எண் பெற்றுவிட்டார்கள். ஆதார் இணைக்கப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மூலம், தவறானநபர்கள் பயன் அடைவது தடுக்கப்பட்டு அரசுக்கு இரண்டரை ஆண்டுகளில் ரூ.49ஆயிரத்து 560 கோடி சேமிக்கப்பட்டுள்ளதுஎனத்தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.