வங்கிக் கணக்கு, செல்போன் சிம் கார்டு பெற ஆதார் எண் கட்டாயம் என்ற அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார். 

அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு, வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கு செல்போன் சிம் கார்டுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

 இதை எதிர்த்துச் சமூக ஆர்வலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. 


அதே நேரத்தில் வங்கிக் கணக்குகள், செல்போன் சேவை மற்றும் மாணவர்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆதார் எண்ணைக் கட்டாயம் என்று அறிவிக்கக் கூடாது எனத் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.

தற்போது வங்கிக் கணக்கு, செல்போன் சிம் கார்டு பெறுவதில் ஆதார் எண் இணைப்பதைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் வகையில், இந்திய டெலிகிராப் சட்டம் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் தெரிவித்தது. 

இந்தப் பரிந்துரை குடியரசு தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதையடுத்து வங்கிக் கணக்கு, செல்போன் இணைப்பு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிம்கார்டு பெறவும், வங்கிக் கணக்கு தொடங்கவும் கட்டாயம் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.