ஒரு பிரியாணியின் விலை ரூ.3 லட்சமா? பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த அரசு அதிகாரி....
அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கணக்கு சரிபார்ப்பின் போது 3 லட்சம் ரூபாய்க்கு பிரியாணி சாப்பிட்டதாக இருந்த பில்களை பார்த்து மருத்துவமனை கண்காணிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிரியாணி விலை ரூ.3 லட்சம்
மேற்குவங்கம் மாநிலம் கத்வா துணைப் பிரிவு மருத்துவமனையில் கண்காணிப்பாளராக சவுவிக் ஆலம் என்பவர் சமீபத்தில் பொறுப்பேற்றார். இவர் மருத்துவமனையில் உள்ள பழைய கணக்கு வழக்குகளை சரி பார்த்துள்ளார். அப்போது கில்ஷூக் என்கிற ஒப்பந்ததாரர் மருத்துவமனைக்கு பல்வேறு பொருட்களை சப்ளை செய்துள்ளார். குறிப்பாக பர்னிச்சர் செலவு, வாகன செலவு, பார்மசி செலவு என பல பில்களை சமர்பித்துள்ளார். சுமார் 3 கோடி ரூபாய்க்கு பில்களை சமர்பித்து கணக்கு காட்டியுள்ளார். இதில் ஒரு பிரியாணி விலை ரூ.3 லட்சம் என கணக்கு காட்டியுள்ளார். இதை பார்த்த மருத்துவமனை கண்காணிப்பாளர் சவுவிக் ஆலம் அதிர்ச்சி அடைந்தார். உணவகத்தில் பிரியாணி விலை அதிகபட்சமாக 300 ரூபாய் மட்டுமே இருக்கும் நிலையில் எப்படி ரூ. 3 லட்சம் வந்தது என விசாரணை நடத்தினார்.
காவல்நிலையத்தில் புகார்
அப்போது பல்வேறு பில்களை கண்காணிப்பாளர் சோதனை செய்துள்ளார். இதில், 3 கோடி ரூபாய்க்கு சமர்பிக்கப்பட்ட பில்களில் 81 வகையான பில்கள் மோசடியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஒப்பந்ததாரர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் காவல்நிலையத்தில் புகார் செய்து குற்றவாளிகளை தண்டிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு மருத்துவமனை மூத்த அதிகாரி டாக்டர் சுபர்னோ கோஸ்வாமி தெரிவித்துள்ளார். பிரியாணி சாப்பிட்டதற்காக ரூ.3 லட்சத்திற்கு பில்கள் சமர்பிக்கப்பட்ட விவகாரம் மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.