மனைவியின் பிறந்தநாளுக்காக இப்படி ஒரு சாதனையா? - 24 மணிநேரத்தில் கட்ட முயன்ற புதிய வீடு….
பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 24 மணிநேரத்தில் 3 படுக்கை அறை கொண்ட வீடுகளை கட்ட முயற்சித்து 90 சதவீத பணிகளை மட்டுமே முடிக்க முடிந்தது. 10 சதவீத பணிகளை முடிக்கமுடியாமல், சாதனையை தவறவிட்டது.
அதிகவேக வீடுகட்டும் தொழில்நுட்பம், புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த வீட்டை கட்ட அந்த நிறுவனம் திட்டமிட்டு 20 சதவீத பணிகளால் சாதனை பறிபோனது.
கர்நாடக மாநிலத்தின் குடகு பகுதியைச் சேர்ந்த காபித் தோட்ட உரிமையாளர்தியாக் உத்தப்பா. இவர் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு புதிய வீடு ஒன்றை பரிசாக தர எண்ணினார். இதற்காக ரிபல் என்ற கட்டுமான நிறுவனத்தை அனுகினார். இதற்காக பெங்களுருவின் வடக்குப்பகுதியில்ஸ்டோன்ஹில் இன்டர்நேஷனல் பள்ளிக்கூடம் அருகே, டி அக்கரஹாராவில், 2,400 சதுர அடி ஒதுக்கப்பட்டது.
கட்டுமான நிறுவனத்தின் தலைவர் பாடே மேணன் 24 மணிநேரத்தில் 3 படுக்கை அறை கொண்ட வீட்டை கட்டித்தருவதாக கூறினார். இதை லிம்காசாதனைப்புத்தகத்திலும் இடம்பெறச் செய்யவும் முடிவு செய்தார். அதற்கான நவீன தொழில்நுட்பங்கள், அதிவிரைவு கட்டுமான சாதனங்கள் அவரிடம் இருந்தன.
இதையடுத்து, சனிக்கிழமை காலை 6 மணிக்கு வீடு கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, அஸ்திவாரம் தோண்டு பணிகள் தொடங்கின. பணிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த பணியில் நவீன எந்திரங்களுடன், 20 பேர் ஈடுபட்டனர். அதிவிரைவாக நடந்த பணியில், வீடு, மாலைக்குள் சுவர், தரை, என மள,மளவென வளர்ந்தது. ஏறக்குறைய 90 சதவீத பணிகள் முடிந்தநிலையில், கான்கிரீட் போடும்போது, மழைதூறியதையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், சாதனையை நிறைவேற்ற முடியாமல் போனது.
இதுகுறித்து கட்டுமான நிறுவனத்தின் தலைவர் மேணன் கூறுகையில், “ இத்துடன் எங்களின் முயற்சிகள் முடிந்துவிடாது, அடுத்த முறையும் முயற்சிப்போம். 24 மணிநேரத்துக்குள் 90 சதவீத பணிகளை முடித்துவிட்டோம்.கான்கிரீட் போடும்போது, காலநிலை சரியில்லாமல் மழை குறுக்கிட்டதால், சாதனையை தவறவிட்டோம். வீட்டின் மேற்கூரையை பொருத்துவதற்கு மட்டும் எங்களுக்கு நேரம் கிடைத்து இருந்தால் முடித்து இருப்போம்’’ எனத் தெரிவித்தார்.