9.3 கோடி பான் கார்டு எண்கள் ஆதாருடன் இணைப்பு
9.3 கோடிக்கும் அதிகமான பான் கார்டு எண்கள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 30 கோடி பான் கார்டு வைத்து இருப்பவர்ளில் 30 சதவீதம் அதாவது, 3 கோடி பேரின் கார்டுகள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் இணைக்கப்பட்டுள்ளன. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ கடந்த 5-ந்தேதி நிலவரப்படி அதாவது வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யகடைசி நாளான அன்று, 9.3 கோடிக்கும் அதிகமாக பான்கார்டுடன் ஆதார் இணைத்தவர்கள் பதிவு செய்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.ஜூலை 1-ந்தேதியில் இருந்து ஆதார் எண்ணுடன், பான்கார்டை இணைத்திருந்தால் மட்டுமே வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய முடியும் என அரசு அறிவித்து இருந்தது. அதன் பின் இம்மாதம் 31-ந்தேதி வரை இவை இரண்டையும் இணைத்துக்கொள்ளலாம் என அவகாசம் அளிக்கப்பட்டது. வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது, ஆதார் எண் அல்லது ஆதாருக்கு விண்ணப்பித்து இருந்தால் அதற்குரிய இணைப்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.