உயிருக்கு போராடிய பச்சிளம்குழந்தை - அவசரத்தில் உதவிய பிரதமர் மோடி
பிறந்த 8 நாட்களே ஆன குழந்தையை சரியான நேரத்துக்கு மருத்துவமனையில் சேர்க்க உதவி பிரதமர் மோடி உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
அசாமைச் சேர்ந்த கலிதா-ஹிமாக்ஷி தம்பதியினருக்கு எட்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் உடலிலிருந்து முதன்முறையாக வெளியாகும் மலம்,அதன் நுரையீரலில் சேர்ந்துவிட்டது.
இதன் காரணமாக அந்த குழந்தை மூச்சு விட கடுமையாக திணறியது. இது தொடர்பாக சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காததால், உடனடியாக டெல்லியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் சனிக்கிழமை அந்த பச்சிளங் குழந்தை அசாமிலிருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் டெல்லி போக்குவரத்து நெரிசல் காரணமாக குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியுமா? என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த பிரச்சனை குறித்து முன்னதாகவே பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைப் புரிந்து கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட்ட மோடி, குழந்தை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் ,ஆம்புலன்ஸ் செல்லும் சாலையில் போக்குவரத்தை நிறுத்த உத்தரவிட்டார்.
இதன் காரணமாக டெல்லி விமான நிலையம் வந்ததும்,சரியான நேரத்தில் சாலை வழியாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் நேற்று அந்த குழந்தை ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும்,உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் குழந்தையை காப்பாற்றிய மோடிக்கு பெற்றோர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.