Major Accident In Ladakh: லடாக்கில் பயங்கர வாகன விபத்து... ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு!!
லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
லடாக்கில் உள்ள ஷியோக் ஆற்றில் ராணுவ வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 26 வீரர்களைக் கொண்ட ஒரு குழு, பார்த்தபூரில் உள்ள போக்குவரத்து முகாமில் இருந்து துணைத் துறையான ஹனிஃபில் உள்ள ஒரு முன்னோக்கி இடத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தது. தோயிஸிலிருந்து சுமார் 25கிமீ தொலைவில், வாகனம் சறுக்கி, சுமார் 50-60 அடி ஆழத்தில் ஷியோக் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பார்த்தபூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே லேயில் இருந்து அறுவை சிகிச்சை குழுக்கள் பார்த்தபூருக்கு விரைந்துள்ளன. மேலும் ஹெலிகாப்டர் மூலமாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும் படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக இந்திய விமானப்படையிடம் ராணுவம் உதவி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களை இந்திய விமானப்படை மூலம் மேற்கு பிராந்திய தலைமையகத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 19 ராணுவ வீரர்களும் விமானம் மூலம் சண்டிமந்திர் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த முழு விவரங்கள் விசாரணைக்கு பின்னர் தெரிய வரும் என கூறப்படுகிறது.