மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகில் உள்ள டோம்பிவலியில் கல் குவாரி ஒன்றில் மழை நீர் தேங்கி இருந்தது. தற்போது கோடை காலம் என்பதால் ஒரு சில இடங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தண்ணீர் தேடி பல இடங்களுக்கு அலைந்துகொண்டிருக்கின்றனர் மக்கள் தண்ணீருக்காக குடங்களுடன் கிலோமீட்டர் கணக்கில் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குடும்பத்தினர், துணி துவைக்க அருகே உள்ள குவாரிக்கு சென்றிருக்கிறார்கள்.

அங்கு பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்த போது, அவர்களுடன் இருந்த பேர குழந்தை குவாரிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கே இருந்த இரண்டு பெண்கள் அவரை காப்பாற்ற தண்ணீரில் குதித்ததாக தெரிகிறது. ஆனால் ஐவரும் நீரில் மூழ்கி இறந்தனர். இறந்தவர்கள் மீரா கெய்க்வாட் (55), அவரது மருமகள் அபேக்ஷா (30), பேரக்குழந்தைகள் மயூரேஷ் (15), மோக்ஷா (13), நிலேஷ் (15) என அடையாளம் காணப்பட்டனர்.

தண்ணீரில் மூழ்கியது குறித்து கிராம மக்கள் மான்பாடா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் விபத்து என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
