358 atm closed all over india

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் பொது மக்கள் மின்னணு பண பரிவர்த்தனையில் ஆர்வம் காட்டி வருவதால் நாடு முழுவதும் 358 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்புக்கு பின்னர் மின்னணு பணபரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து பொது மக்கள் பணமல்லா பரிவர்த்தனையை பயன்படுத்த தொடங்கிவிட்டதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக வங்கிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மின்னணு பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளதன் காரணமாக , நாடு முழுவதும் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 358 ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மொத்த எண்ணிக்கையில் 0.16 சதவீதம் என்றும் கடந்த 4 ஆண்டுகளாக ஆண்டுக்கு 16.4 சதவீதம் ஏ.டி.எம்.கள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது முதன் முறையாக ஏ.டி.எம். எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் வங்கிகள் தெரிவித்துள்ளன..

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஏ.டி.எம்.கள் அமைந்துள்ள இடத்துக்கு வாடகையாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஆகிறது. நாள் முழுவதும் 15 முதல் 18 டிகிரியில் வெப்பநிலை பராமரிப்பதால் மின்சார செலவு தான் மிகப்பெரிதாக இருக்கிறது. பாதுகாவலர் சம்பளம், பராமரிப்பு எல்லாம் சேர்த்தால் மாதம் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. இதுவும் ஏ.டி.எம்.கள் மூடப்படுவதற்கு ஒரு காரணம் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.