அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து... 26 பேர் பலி... டெல்லியில் பரபரப்பு!!
மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ நிலையத்திற்கு அருகில் நான்கு மாடிகளை கொண்ட வணிக கட்டிடம் அமைந்துள்ளது. இதில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் ஏராளமானோர் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கட்டிடத்தில் இருந்து சுமார் 60 முதல் 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இந்த தீ விபத்தில் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருபுறம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், இன்று மாலை 4.40 மணியளவில் தீ பற்றிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். தீ இன்னும் அணைக்கப்படவில்லை. கட்டிடம் முழுவதும் எரிந்துள்ளது.
இதனிடையே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் துயரம் அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.