கடந்த 9 ஆண்டுகளில் 108 ஆம்புலன்சில் 25 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு
கடந்த 9 ஆண்டுகளில் 108 ஆம்புலன்ஸ்களில் மட்டும் 25 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பூக்குழியைச் சேர்ந்தவர் முருகன். இவரின் மனைவி சவுமியா(வயது22). முருகன் வாடகை கார் ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். கர்பினியான சவுமியா தலைப் பிரசவத்தை எதிர் நோக்கி இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென சவுமியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரின் பெற்றோர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அடுத்த 20 நிமிடங்களில் சவுமியா வீட்டுக்குஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அவரை அருகில் உள்ள பாலுசெட்டி சத்திரம் அருகே இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்துக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர்.
ஆனால், ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடையும் முன்பே சவுமியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து சாலை ஓரமாக வேன் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் அழகான பெண் குழந்தையை ஆம்புலன்சிலேயேசவுமியா பெற்று எடுத்தார். அதன்பின் தாயும், சேயும் ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் சிறப்பு என்னவென்றால், சவுமியாவுக்கு பிறந்த குழந்தை என்பது, 108 ஆம்புலன்சில் பிறந்த 25 ஆயிரமாவது குழந்தை என்ற சிறப்புப் பெற்றது. இதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகளில் 25 ஆயிரம் குழந்தைகள் ஆம்புலன்சிலேயே பிறந்துள்ளன. ஆம்புலன்சில் இதுவரை ஒரு குழந்தைகூட அல்லது தாய் கூட உயிரிழப்பை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனைக்கு வெளியே நடக்கும் மகப்பேறால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதை தடுக்க கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இதன்மூலம், மருத்துவமனையில் நடந்த மகப்பேறு 2008ம் ஆண்டில் 76 சதவீதம் இருந்த நிலையில், 2017ம் ஆண்டில் இது 95 சதவீகமாக உயர்ந்தது.
108 ஆம்புலன்ஸ் சேவை ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிறுவனம் மூலம் வெளிப்பணி ஒப்படைப்பு மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் 900 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பெற இப்போது ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்களும் வந்துவிட்டன.
இந்த ஆப்ஸ் மூலம், 108 ஆம்புலன்ஸ்களை தொடர்பு கொண்டால், தகவல் அளிப்பவர் இடம், தூரம், ஆகியவைகால்சென்டருக்கு தெரிந்து விடும்.
இது குறித்து 108 ஆம்புலன்ஸின் வர்த்தகப்பிரிவு தலைவர் பி பிரபுதாஸ் கூறுகையில், “ சென்னை தவிர்த்து ஒருநபர் எங்களைத் தொடர்பு கொண்டால் 20 நிமிடங்களுக்குள் அந்த இடத்தை அடைந்துவிடுவோம். அதுவே சென்னையைப் பொருத்தவரை 10 நிமிடங்களுக்குள் அந்த இடத்தை அடைந்து விடுவோம். எங்களிடம் உள்ள அனைத்து நர்சுகளும் பிரசவம் பார்க்க பயிற்சி பெற்றவர்கள். இதனால், மிகவும் சிக்கலான பெண்களுக்கு கூடஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்து மருத்துவமனையில் பாதுகாப்பாக சேர்த்துள்ளனர்’’ என்றார்.