வாரணாசி பல்கலை மாணவர்கள் ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு; 2 போலீஸ் அதிகாரிகள் நீக்கம்
உத்தரப்பிரதேசம், வாரணாசியில் உள்ள பனராஸ் இந்து பல்கலையில் மாணவ,மாணவிகள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக 2 போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 4 போலீஸார்களை நீக்கி மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம், ஆயிரம் மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை
வாரணாசி பனாராஸ் பல்கலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிமை விடுதிக்கு திரும்புகையில், அடையாளம் தெரியாத 3 பேரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார். இது தொடர்பாக அந்த மாணவி, விடுதியின் காப்பாளரிடம் புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
போராட்டம்
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாணவர்கள் பல்கலையின் பிரதான வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சனிக்கிழமை இரவு மாணவர்கள் துணை வேந்தர் இல்லத்துக்கு செல்ல முற்பட்டபோது, போலீசார் அவர்களைத் தடுத்தனர்.
தடியடி
இதனால், ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், வன்முறை மூண்டது. மாணவர்கள் கற்களை வீசியும், இரு சக்கர வாகனங்களையும் எரித்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய தடியடியில் ஏராளமான மாணவிகள் காயமடைந்தனர். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் இருவரும் காயமடைந்தனர்.
விசாரணை அறிக்கை
இந்த சம்பவம் முதல்வர் ஆதித்யநாத் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர் இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், வாரணாசி மண்டல போலீஸ் கமிஷனர் நிதின் கோக்ரன், கோக்ரான் மண்டல போலீஸ் ஏ.டி.ஜி.பி விஸ்வஜித் மஹாபத்ரா ஆகியோர் விசாரணை நடத்தி, கூட்டாக அறிக்கை அளிக்க தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார் உத்தரவிட்டார்.
நீக்கம்
இதற்கிடையே மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக 2 போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் லங்கா போலீஸ் நிலைய அதிகாரி ராஜீவ் சிங், ஜெய்த்புரா போலீஸ் நிலைய அதிகாரி சஞ்சீவ் மிஸ்ரா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
மேலும், பெலுபுர் வட்ட அதிகாரி நிவேஷ் கத்தியார், கோட்வாலி வட்ட அதிகாரி அயோத்தியா பிரசாத் சிங் நீக்கப்பட்டனர். மேலும், மனோஜ் குமார் சிங், சுஷில் குமார் சிங், ஜகதம்மா பிரசாத் சிங் ஆகிய போலீசாரும் நீக்கப்பட்டனர்.
மாணவர்கள் மீது எப்.ஐ.ஆர்.
இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்டதாக பல்கலையில் பயிலும் ஆயிரம் மாணவர்கள் மீது லங்கா போலீஸ் நிலையம் சார்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து, அடையாளம் தெரியாத போலீசார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமாஜ்வாதியினர் கைது
இந்நிலையில் பல்கலையில் நடந்த தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களைச் சந்திக்க சமாஜ்வாதிக் கட்சியின் நேற்று முயன்றனர். அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை, ஆனால், மீறிச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.