You must be aware of the symptoms of the cancer
இருதய நோய்க்கு அடுத்து புற்று நோயால் ஏற்படும் உயிர் இழப்புகள் அதிகமாக இருக்கின்றது. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் எளிதாய் குணப்படுத்தப்படுகின்றது. சில வகை புற்றுநோய்கள் அறிகுறிகள் இல்லாமல் உருவாகும். சில அறிகுறிகளை நாம் ஒன்றுமில்லை என்று ஒதுக்குவதும் புற்றுநோய்க்கான அபாயத்தில் கொண்டு விடலாம்.
புற்று நோய் பரிசோதனைகள் அதனை கண்டுபிடிக்க எளிதாக்கும். பொதுவில் அதிக சிகரெட் பிடிப்பவர்கள், அதிக மது பழக்கம் உடையவர்கள் ரத்த உறவுகளில் புற்றுநோய் பாதிப்பு உடையவர்கள், மிக அதிகம் வெயிலிலேயே இருப்பவர்கள் கண்டிப்பாய் சில அறிகுறிகளை ஒதுக்கவே கூடாது.
விடாது இருமல், எச்சிலில் சிறிது ரத்தம் இருந்தால்..இந்த அறிகுறி சாதாரண கிருமி தாக்குதலாலும் ஏற்படக்கூடும். நுரையீரல், தலை, கழுத்து இவற்றில் புற்று நோய் இருக்கும் அபாயமும் உண்டு.
ஒரு மாதத்திற்கு மேல் இருமல், எச்சிலில் லேசான ரத்தம் இருந்தால் உடனடி மருத்துவ ஆலோசனை பெறுக.
பொதுவில் நார்சத்து உணவு, நீர் இவை குறையும் பொழுது மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் மிக மெலிதான கழிவு வெளியேற்றம், தொடர் வயிற்றுப்போக்கு இவை குடல் சம்பந்தப்பட்ட புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
உங்களுக்கு முதலில் ரத்த சோகை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
பல வகை புற்று நோய்கள் ரத்த சோகையினை ஏற்படுத்தக்கூடும். குடல் புற்று நோய் இரும்பு சத்து குறைவான ரத்த சோகையினை ஏற்படுத்தக்கூடும். இதனை தொடர்ந்து சில மருத்துவ பரிசோதனைகளை முறையாய் மருத்துவ ஆலோசனை படி செய்து கொள்க.
மார்பக கட்டி, மார்பக காம்பில் கசிவு
அநேக மார்பக கட்டிகள் புற்றுநோயாக இருப்பதில்லை. ஆனால் மார்பக கட்டி என்றாலே உடனடியாக புற்று நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது போல் நீர்கசிவு, ரத்த கசிவு இருந்தால் மருத்துவ பரிசோதனை மிக மிக அவசியம் ஆகும். பெண்கள் ஒவ்வொரு மாதமும் மார்பகத்தில் கட்டி இருக்கின்றதா என சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இது போன்று ஆண்களின் விதைப்பையிலும் வலியில்லாத அசவுகர்யமாக கட்டி இருக்க கூடும். கிருமிகள் பாதிப்பும் இங்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆண்களும் இத்தகு கட்டிகள் இருக்கின்றதா என ஒவ்வொரு மாதமும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
குறைவான சிறுநீர் வெளியேற்றம்
மிகவும் மெலிதாய் தாமதமாய் சிறுநீர் வெளியேற்றம் போன்றவை கிருமி பாதிப்பு மற்றும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பிரச்சினை போன்றவற்றின் காரணத்தினால் ஏற்படலாம். இருப்பினும் முறையான சிகிச்சை மேலும் அவசியப்பட்டால் மேலும் பரிசோதனைகள் அவசியம். இதனை ஒதுக்கக்கூடாது.
சிறுநீரில் ரத்தம் என்பது சிறுநீரக கல், கிருமி தாக்குதல் இவற்றால் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆயினும் மேலும் பரிசோதனை தேவைப்பட்டால் அலட்சியம் செய்யாமல் முறையான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
குரல் தடிப்பு சுவாச மண்டல பாதிப்பால் ஏற்பட்டு 3 வாரம் வரை இருக்கும். அலர்ஜி கூட இதே பாதிப்பினை ஏற்படுத்தும் ஆனால் தொடர்ந்து இப்பாதிப்பு இருக்குமாயின் மருத்துவ கவனம் தேவை.
நிண நீர் சுரப்பிகள் கிருமி பாதிப்பு காரணமாக வீங்குவது உண்டு. ஆனால் ஒரு மாதத்திற்கு மேல்இந்த வீக்கம் நீடித்தாலோ அல்லது உடலில் எங்கேனும் தசை கட்டி போல் இருந்தாலோ மருத்துவ ஆலோசனை அவசியம்.
உங்கள் மரு அல்லது மச்சத்தில் திடீரென மாறுதல் ஏற்பட்டால் கவனம் தேவை. திடீரென மரு, மச்சத்தில் நிறமாற்றம், பெரிதாகுதல் ரத்தக் கசிவு ஏற்பட்டால் கண்டிப்பாய் சுய சிகிச்சை செய்து கொள்ளாதீர்கள். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
அஜீரணம், உணவு விழுங்க கடினம், பொதுவாக நெஞ்செரிச்சல் அபாய பிரச்சினைகளை தராது. ஆனால் விடாமல் தொடர்ந்து மேற்கூறிய பிரச்சினைகள் இருக்குமாயின் முழு உணவுக் குழாய் பரிசோதனையும் அவசியம்.
பெண்களுக்கு பிறப்பு உறுப்பிலிருந்து முறையற்ற ரத்த கசிவு, நீர் கசிவு இருந்தால்….
நாம் முயற்சிக்காது ஏற்படும் எடை குறைவு, இரவில் அதிக வியர்வை, ஜூரம் போன்றவைகளுக்கு கிருமிகளும் காரணம் என்றாலும் முழுமையான உடல் பரிசோதனை அவசியம்.
பிறப்புறுப்பு, குடல் வாய் இவற்றில் விடாது அரிப்பு இருந்தால் பூஞ்ஜை மற்றும் கிருமி பாதிப்பு இருக்கலாம். மேல் பூச்சு மருந்தின் மூலம் நிவாரணம் இல்லையெனில் முறையான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
புண்கள் சில நாட்களில் ஆறும். ஆனால் ஆறாத புண்கள் இருந்தால் ஈறுகள், நாக்கு, டான்ஸில்ஸ் இவற்றில் ஆறாத புண்கள் இருந்தாலோ, சர்க்கரை நோய் காரணமாக காலில் ஆறாத புண் இருந்தாலோ கவனம் தேவை.
தலைவலி பொதுவாக காணப்படும் ஒன்றுதான். மைக்ரேன், அனியூரிஸம் போன்ற பாதிப்புகளாலும் தலை வலி ஏற்படுவது உண்டு. ஆனால் சிகிச்சைக்குப் பிறகும் தலை வலி தொடர்ந்தால் காலம் தாமதிக்காது மருத்துவரை அணுகவும்.
முதுகுவலி, இடுப்பு வலி, அஜீரணம் -இவ்வார்த்தைகள் உபயோகிக்காதவர் இல்லை. உணவு, சுளுக்கு என இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் அபாயம் உள்ளதா என்பதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து மஞ்சக்காமாலை இருந்து கொண்டே இருக்கின்றதா? கல்லீரல் புற்றுநோய் அபாயத்தினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
விடாது அஜீரணம், நெஞ்செரிச்சல், விழுங்குவதில் கடினம், வயிற்றுவலி, வாந்தியில் ரத்தம், வெளிப்போக்கில் ரத்தம், பசியின்மை, சோர்வு இவை அனைத்துமே உடனடி வயிற்றுப் பரிசோதனை தேவைப்படுபவை.
