We need to make our body healthy during the summer ...

வெயில் காலத்தில் நமது உடல் நலத்தை பாதுகாப்பது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் கோடைகாலம் முழுவதும் உடல் சுலபமாக சோர்வடையும் நீர்சத்து குறைபாடு, உடல் வெப்ப நிலை மாறுபாடு, சரும பிரச்சினைகள், அதிக வியர்வை போன்ற பல பிரச்சினைகளை அனைவரும் எதிர்கொள்ள வேண்டி வரும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வெயில்காலம் முழுவதும் நாம் உணவு பழக்கம், அன்றாட செயல்கள், சில உடற்பயிற்சி, ஆடைகளில் மாற்றம் போன்றவை மேற்கொள்வது மிக முக்கியம்.

வெயில் காலத்தில் இந்த உணவுகள் தான் சரி:

அதிகமான காரம் மற்றும் உடற்சூட்டை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். நீர்காய்கறிகளான வெள்ளரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்றவைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

கோடைகாலத்தில் இரண்டு கனிம சத்துக்கள் மிக முக்கியமானது. சோடியம் மற்றும் பொடாட்சியம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும். பசலை கீரையில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்து உள்ளது.

எனவே வெயில் காலங்களில் அடிக்கடி உணவில் ஏதேனும் ஓர் வகையில் பசலைக்கீரையை சேர்த்துக் கொள்ளவும். சோடியம் எனும்போது உப்பு தேவையான அளவு சேர்ப்பது நல்லது. நோயாளிகள் உப்பு சேர்ப்பது குறித்து மருத்துவர் ஆலோசனை படியே நடக்க வேண்டும்.

பழங்கள் எனும்போது தர்பூசணி, கீர்னி, வெள்ளரிப்பழம், எலுமிச்சை, மஸ்க்மொன் போன்றவை உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அன்றாட வேலைகளில் மாற்றங்கள்:

பெரும்பாலும் நாம் வெளியே மேற்கொள்ள வேண்டிய பணிகளை காலை அல்லது மாலை வேளைகளில் செய்திடல் நல்லது. முதியவர்கள் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது குடை, தண்ணீர், சர்க்கரை மற்றும் சாக்லேட் போன்றவைகளை எடுத்து செல்லவும்.

ஏதேனும் மயக்கம் ஏற்பட்டால் உடே தண்ணீர் மற்றும் சர்க்கரை உதவிகரமாக இருக்கும். அலுவலகம் செல்வோர் இருசக்கரவாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம், கையுறை போன்றவை அணிந்து செல்லவும்.

அதிக வெயில் நேரம் எனில் ஈரப்படுத்திய கைக்குட்டையை முகத்தில் கட்டிக் கொண்டால் உஷ்ண காற்று சுவாசித்தலை தவிர்க்கலாம். அதுபோல் மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறுகளை பாட்டிலில் அடைத்து கொண்டு சென்று தேவையான போது அருந்துவது வேண்டும்.

தினம் இருவேளை பச்சை தண்ணீரில் குளியல், தளர்வான பருத்தி ஆடைகள் அணிவது, எந்நேரமும் வீட்டின் உட்புறம் அடைந்து இல்லாமல் மாலை நேரம் இயற்கை காற்றில், சிறுநடை போன்றவை உடல் உஷ்ணமடைவதை தவிர்க்கும்.

வீடுகளில் குளிர்ச்சியை ஏற்படுத்த தரைகளை தண்ணீர் கொண்டு துடைப்பது, திரை சீலைக்கு பதிலாக வெற்றிவேர் பதாகைகள், சீலைகள், மூங்கில் திரை சீலைகள் போன்றவற்றை ஜன்னல் மற்றும் வாசல் பகுதிகளில் தொங்க விடலாம்.

கோடைகாலத்தில் உடலில் வியர்வை நாற்றம் வராது இருக்க சந்தனம், ஜவ்வாது போன்றவைகளை குளித்தவுடன் உடலில் பூசச் செய்யலாம். அதுபோல் நாம் குடிக்கும் நீரில் வெட்டிவேர், நண்ணாரி போன்றவை போட்டு சுவைநீராக அருந்தும்போது உடல் உஷ்ணம் ஏற்படாது. சருமமும் போஷாக்குடன் புத்துணர்வுடன் இருக்கும்.