பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம். பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது.

பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும்.

இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.