This first aid can be done for the chest pain ...

நெஞ்சு வலி வந்தவரை உட்காரவைத்து, முன்புறமாகச் சாய்த்து, நன்கு மூச்சை இழுத்து விடச் சொல்ல வேண்டும்.

ஏற்கெனவே நெஞ்சுவலிக்கான மாத்திரை எடுப்பவராக இருந்தால், டாக்டர் சொன்னபடி அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நெஞ்சுவலி வந்தால், அதை, ‘சாதாரண வாய்வுக் குத்து’ என்று அலட்சியமாக விடவே கூடாது. இதய வலி எனில், யானை ஏறி மிதிப்பது போல், வலி பயங்கரமாக இருக்கும். மூச்சு விடச் சிரமமாக இருக்கும். வியர்த்துக் கொட்டும்.

சிலருக்குத் தாடை வரை வலி வரும். சிலருக்கு இடது கை வலிக்கும். சில சமயங்களில் முதுகு, வயிறுக்குக் கூட வலி பரவும்.

ஆனால், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இவற்றில் எந்த அறிகுறியும் இருக்காது. அதனால் அவர்கள் எந்த மாதிரியான நெஞ்சுவலியாக இருந்தாலும், அதை ‘மாரடைப்பு’ போலவே கருதி, டாக்டரிடம் போய்விடுவது நல்லது.

சும்மா சோடா குடித்தால் வலி போய்விடும் என்று சொல்லித் தவிர்க்கக் கூடாது. தாமாக மாத்திரை வாங்கிப் போடுவதும் மிக ஆபத்து.

நெஞ்சுவலி வந்துவிட்டால், நேரம் என்பது மிக முக்கியம். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து.

அருகில் இருக்கும் மருத்துவமனையில், இதய நோய்க்கான சிகிச்சை உபகரணங்கள் (ஈ.ஸி.ஜி. போன்றவை) இருக்கும் இடமாகச் செல்வது நல்லது.

மாரடைப்பு என்றால், மார்புப் பகுதியில் அழுத்துவதுபோன்ற கடுமையான வலி இருக்கும். அதிகம் வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோல் இருக்கும்.

இதில் எந்த வகையாக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்க வேண்டும். இது ரத்தம் கட்டியாவதைத் தடுக்கிறது.