Grandmother of medical treatment to cure diarrhea

கோடைகாலம் வரப்போகிறது. இந்த காலத்தில் அடிக்கடி ஏற்படக்கூடிய சில உடல் நலக் குறைவுகளை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும். அதில் ஒன்று தான் இந்த வயிற்றுப்போக்கு.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வலி மற்றும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் வரை அனைவரும் வயிற்றுப்போக்கை சாதரணமாகத் தான் நினைக்கின்றனர்.

தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, உடலில் வறட்சியை ஏற்படுத்தக்கூடும். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வது மிக அவசியம்.

குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்பட்டால் அதனை உடனடியாக கவனிக்க வேண்டும்.

எலுமிச்சைச் சாறு:

இது வயிற்றுப்போக்கிற்கான வைத்திய முறைகளில் நிரூபிக்கப்பட்ட மேலும் பழமையான முறைகளில் ஒன்று. எலுமிச்சையில் இயற்கையாகவே நோய் தொற்றுக்களை அழிக்கக்கூடிய பண்பு உள்ளது.

எனவே, வயிற்றுப்போக்கு ஏற்படும் போது எலுமிச்சைச் சாற்றில் தண்ணீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து குடிப்பதனால் சரியாகும். இது வயிற்றுப்போக்கினால் உடலில் வறட்சி ஏற்படாமலும் தடுக்கும்

மாதுளை

கோடைகாலத்தில் மாதுளைப் பழமானது நிறையக் கிடைக்கும். மாதுளையின் ஜூஸ் மட்டுமல்ல அதன் விதை கூட வயிற்றுப்போக்கிற்கு நல்லது தான். வயிற்றுப்போக்கு ஏற்படும் போது மாதுளைப் பழம் ஜூஸ் குடித்தால் நல்லது. ஒரு நாளைக்கு 3 அல்லது 4 டம்ளர் மாதுளை ஜூஸ் குடிக்கலாம். ஜூஸாக குடிக்காமல் பழமாக சாப்பிட்டால் 2 பழம் போதுமானது.

தேன்

தேன் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பாதுகாப்பான உணவாகும். தேன் மற்றும் ஏலக்காய் பொடியை வெந்நீரில் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.

இஞ்சி

அஜீரணத்திற்கு இஞ்சி ஒரு மிகச் சிறந்த மருந்தாகும். இதில் இருக்கும் ஆன்டிபாக்டீரியல் குணம் வயிற்றுப்போக்கை நிறுத்தும். அரை டீஸ்பூன் சுக்குப் பொடியை மோரில் கலந்து நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 முறை குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

பப்பாளி காய்

கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும் பழங்களில் பப்பாளியும் ஒன்று. பப்பாளி காய் வயிற்றுப்போக்கிற்கு நல்ல மருந்தாகும். பப்பாளி காயைத் துருவி மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அந்த கொதித்த நீரை வடிகட்டி சிறிது நேரம் கழித்து குடிக்க வேண்டும்.

மோர்

கோடைகாலத்தில் வெயிலுக்கு இதமான குளிர்பானம் என்றால் அது மோர் தான். மோருக்கு இணை வேறு எதுவுமில்லை. இதில் உள்ள அமிலத்தன்மை செரிமான இயக்கத்திற்கு உதவுகிறது. ஒரு டம்ளர் மோரில் உப்பு, சிறிது ஜீரகப்பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து, நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை குடித்தால் வயிற்றுப்போக்கிற்கு நல்லது.

வெந்தயம்

வெந்தயத்தில் அதிகப்படியான ஆன்டிபாக்டீரியல் குணம் இருக்கிறது. வீட்டு வைத்திய முறை அனைத்திலும் வெந்தயம் நிச்சயம் இருக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் 2 டீஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்த்துக் குடிக்க வேண்டும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.

சுரைக்காய் ஜூஸ்

சுரைக்காயை நீர் காய் என்றும் கூறுவதுண்டு. ஏனெனில், இதற்கு உடலில் நீரினை தக்க வைத்துக்கொள்ளும் குணம் உண்டு. எனவே, இது நமது உடலை வறட்சி அடையாமல் தடுக்கும். கோடை காலத்திற்கு ஏற்ற காய் இது.

சுரைக்காயின் தோலை சீவி விட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி,அதை அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் குடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு டம்ளர் ஜூஸ் போதுமானது.