சளி, இருமலுக்கு நிவாரணம் தரும் வெற்றிலை – இயற்கை மருத்துவம் 
வெற்றிலை கொடியின் இலை மற்றும் வேர் பயன்தரும் பாகங்கள். சளி, இருமலுக்கு வெற்றிலை நிவாரணம் தருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வெற்றிலை கொடியின் இலை மற்றும் வேர் பயன்தரும் பாகங்கள். பொதுவான குணம், சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகலகற்றி, உமிழ்நீர் பெருக்கும், பசியை உண்டாக்கும். பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும், நாடி நரம்பை உரமாக்கும். வாய் நாற்றத்தை போக்கும். வெற்றிலைச் சாற்று சீறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது.

வெற்றிலைச் சாற்றுடன் நீர் கலந்த பாலையும் தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்து கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் ஜீரம், ஜன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில், கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணெயில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கும் வைத்துக் கட்ட நல்ல பயன்தரும்.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுகு சூரணத்துடன் வெற்றிலைச் சாறு, தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

5 கிராம் சூரணம் + 10 மி.லி. வெற்றிலைச் சாறு, தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை, நோய்க்குத் தக்கவாறு 48 -96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.

வெற்றிலையோடு மிளகு சேர்த்து கசாயம் செய்து கொடுத்து வரலாம்.