Asianet News TamilAsianet News Tamil

சுவையும், மருத்துவ குணமும் கொண்ட பிரண்டை சட்னி செய்து சாப்பிடுங்க!

பிரண்டை வைத்து டேஸ்டான சட்னி ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். இந்த சட்னியானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. 

How to make Veldt Grape Chutney in Tamil
Author
First Published Dec 22, 2022, 8:44 PM IST

வழக்கமாக இட்லி, தோசை போன்றவற்றிற்கு சாம்பார், குருமா, தேங்காய் சட்னி, மல்லி சட்னி, தக்காளி சட்னி என்று சாப்பிட்டு அலுத்து விட்டதா? இதனை தவிர்த்து வேற ரெசிபி செய்ய வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். 

நாம் வழக்கமாக செய்து சாப்பிடுகின்ற சட்னிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும் ஒரு சட்னியை தான் காண உள்ளோம். இந்த சட்னியானது சுவையை தருவதோடு மட்டுமல்லாமல், நமக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. என்ன சட்னியாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?

பிரண்டை வைத்து டேஸ்டான சட்னி ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். இந்த சட்னியானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. 

பொதுவாக பிரண்டை வைத்து பிரண்டை துவையல், பிரண்டை பொடி, பிரண்டை ஊறுகாய், பிரண்டை லேகியம் எனப் பல வகையான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பிரண்டை வைத்து சட்னி செய்ய உள்ளோம்.

தேவையான பொருட்கள்:

பிரண்டை - 100 கிராம்
பூண்டு- 4 பற்கள் 
தேங்காய்-1/2 கப் 
காய்ந்த மிளகாய் - 10
புளி - லெமன் சைஸ் 
கடுகு- 1/4 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு

அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய ஸ்னாக்ஸ் "கேழ்வரகு தட்டை"

செய்முறை

முதலில் பிரண்டையை அலசி கொண்டு அதனை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி கொண்டு சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிரண்டை அனைத்தும் எண்ணெய்யில் மூழ்கி இருக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். பிரண்டையானது நன்கு சிவந்து உடையும் அளவிற்கு வறுத்துக் கொள்ள வேண்டும். 

பின் வாணலியில் இருந்து பிரண்டையை எண்ணெய் இல்லாமல் வடிகட்டிக் கொண்டு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள எண்ணெயினை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து வாணலியில் கடலைப்பருப்பு,  பூண்டு, புளி , தேங்காய் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொண்டு பின் அதில் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

அனைத்தும் நன்றாக வாசனை வந்து சிவந்த பிறகு அதில் வறுத்து வைத்துள்ள பிரண்டை சேர்த்து விட வேண்டும். இந்த கலவையை நன்றாக ஆற வைத்துக் கொண்டு, ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக்கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொண்டு அதனை பிரண்டை சட்னியில் சேர்த்தால் ருசியான பிரண்டை சட்னி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios