- Home
- உலகம்
- ரகசியமாக நடந்த பாக். ராணுவ தளபதி வீட்டு கல்யாணம்..! அண்ணன் மகனுக்கு மகளை மணமுடித்த அசிம் முனீர்!
ரகசியமாக நடந்த பாக். ராணுவ தளபதி வீட்டு கல்யாணம்..! அண்ணன் மகனுக்கு மகளை மணமுடித்த அசிம் முனீர்!
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரின் மகள் திருமணம் ராவல்பிண்டியில் ரகசியமாக நடைபெற்றது. இந்த விழாவில் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட போதிலும், முனீரின் தலைமை மீது சர்வதேச விமர்சனங்களும், எல்லைப் பாதுகாப்பு தோல்விகளும் எழுந்துள்ளன.

ரகசியமாக நடந்த திருமண விழா
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரின் மூன்றாவது மகள் மஹ்னூர் (Mahnoor), தனது நெருங்கிய உறவினரான அப்துல் ரஹ்மானை (Abdul Rehman) டிசம்பர் 26 அன்று மணந்துகொண்டார்.
ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தில் இந்தத் திருமணம் நடைபெற்றது. நாட்டின் மிக உயரிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் முக்கியப் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர். இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விழா மிகவும் ரகசியமாக நடைபெற்றது. புகைப்படங்கள் எதையும் ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷபாஸ் ஷெரீப், துணைப் பிரதமர் இஷாக் தார், ஐஎஸ்ஐ (ISI) உளவுத்துறை தலைவர், ஓய்வுபெற்ற ஜெனரல்கள் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதிகள் இந்தத் திருமண நிகழ்வில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
யார் மாப்பிள்ளை?
மாப்பிள்ளை அப்துல் ரஹ்மான், ஜெனரல் சிம் முனீரின் சகோதரர் மகன் ஆவார். இவர் ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றியவர். பின்னர் ராணுவ அதிகாரிகளுக்கான இடஒதுக்கீடு மூலம் சிவில் சர்வீஸில் இணைந்து, தற்போது உதவி ஆணையராக (Assistant Commissioner) பணியாற்றி வருகிறார்.
பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஜாஹித் கிஷ்கோரி (Zahid Gishkori) கூற்றுப்படி, சுமார் 400 விருந்தினர்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றனர். ஜெனரல் முனீருக்கு நான்கு மகள்கள் உள்ளனர்; இது அவரது மூன்றாவது மகளின் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விமர்சனங்கள்
மகிழ்ச்சியான திருமணச் செய்திகளுக்கு மத்தியிலும், ஜெனரல் அசிம் முனீரின் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
'கிரீக் சிட்டி டைம்ஸ்' (Greek City Times) வெளியிட்டுள்ள அறிக்கையில், முனீரின் தலைமையின் கீழ் பாகிஸ்தான் மதத் தீவிரவாதத்தை நோக்கி வேகமாகச் சரிந்து வருவதாகவும், சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீதான மதிப்பு குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்புத் தோல்வி
பாகிஸ்தான் ராணுவத்தின் தவறான ராஜதந்திர நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் உடனான உறவு மோசமடைந்துள்ளதாக 'ஏசியன் நியூஸ் போஸ்ட்' (Asian News Post) தெரிவித்துள்ளது.
தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றியபோது ஆதரித்த இதே ராணுவக் கட்டமைப்பு, இப்போது எல்லைத் தாண்டிய வன்முறைக்கு தாலிபான்களையே குற்றம் சாட்டுவதாகவும், இது பிராந்தியத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகவும் ஏசியன் நியூஸ் போஸ்ட் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

