- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : மனோஜுக்கு கோயிலில் காத்திருந்த அதிர்ச்சி... மகனின் களவாணித்தனத்தை கண்டுபிடித்தாரா விஜயா?
Siragadikka Aasai : மனோஜுக்கு கோயிலில் காத்திருந்த அதிர்ச்சி... மகனின் களவாணித்தனத்தை கண்டுபிடித்தாரா விஜயா?
Siragadikka Aasai Serial 11 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் கனகாவை திருமணம் செய்த கையோடு கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார் மனோஜ். அங்கு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் கனகாவின் திருமணம் எளிமையாக நடைபெற்று முடிகிறது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் கோயிலுக்கு செல்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் விஜயாவும், பார்வதி ஆண்ட்டியும் அதே கோயிலுக்கு வருவதால் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. கோயிலில் மனோஜை பார்த்ததும் விஜயா அவரை அடையாளம் கண்டு அருகில் வருகிறார். இதனால் மனோஜ் பதற்றத்தில் உறைந்து போகிறார். அந்த நேரத்தில் கனகாவின் அம்மா "மாப்பிள்ளை" என்று மனோஜை அழைக்கிறார். இதைக் கண்ட விஜயா அதிர்ச்சியில் ஆழ்கிறார்.
Siragadikka Aasai : கல்யாண வீட்டில் முத்து - மீனா என்ட்ரி... மனோஜ் சிக்கினாரா? எஸ்கேப் ஆனாரா?
மனோஜை காப்பாற்றிய ஜோதிடர்
அதே சமயம் அங்கு வந்த ஜோதிடர் நிலைமையை சமாளிக்கும் வகையில், உண்மையான மாப்பிள்ளை இவர்தான் என்று வேறு ஒருவரைக் காட்டி சூழ்நிலையை மாற்றிவிடுகிறார். இதனால் விஜயாவும் அதை நம்பி சந்தேகமின்றி அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். பெரிய பிரச்சினை தவிர்க்கப்பட்டதால் மனோஜ் நிம்மதி அடைகிறார். பின்னர் கனகாவின் அம்மா, "இப்போது திருமணம் முடிந்துவிட்டது. இனி உங்கள் அம்மாவிடம் உண்மையை எப்போ சொல்லப் போகிறீர்கள்?" என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், "இன்னும் விவாகரத்து சட்டப்படி முடிவடையவில்லை. அதற்குள் இந்த திருமணத்தை வீட்டில் சொல்ல முடியாது. அம்மாவும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அதனால் இப்போதைக்கு இந்த விஷயத்தை ரகசியமாகவே வைத்திருக்கலாம்" என்று கூறுகிறார்.
பர்ஸ்ட் நைட்டுக்கு நோ சொன்ன மனோஜ்
அதன்பிறகு, திருமணம் நடந்த நாளே சாந்தி முகூர்த்தத்தை நடத்த வேண்டும் என்று கனகாவின் அம்மா வலியுறுத்துகிறார். ஆனால் விஜயா கோயிலில் பார்த்த சம்பவத்தால் ஏற்கனவே பயந்துபோன மனோஜ், இன்று முடியாது, பிறகு ஒரு நல்ல நாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார். அப்போது திருமணத்திற்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் குறித்து மனோஜ் கேட்கிறார். ஆனால் கனகாவின் அம்மா, இப்போது பணத்தை கொடுத்தால் மனோஜ் மீண்டும் வராமல் போய்விடுவார் என்று எண்ணி, "என் கணவர் வந்ததும் பணத்தை வாங்கித் தருகிறேன்" என்று கூறி சமாளிக்கிறார்.
பெருமையாக பேசும் விஜயா
இதற்கிடையில் மனோஜ் வீட்டிற்கு வருகிறார். அங்கு முத்துவும் அண்ணாமலையும் திருமணம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மனோஜ் உள்ளுக்குள் பதற்றத்துடன் இருந்தாலும் வெளியில் எதையும் காட்டாமல் இருக்கிறார். சிறிது நேரத்தில் விஜயாவும் வீட்டிற்கு வந்து, கோயிலில் ஒரு மாப்பிள்ளையை பார்த்ததாகவும், அவர் மனோஜின் நண்பர் போல இருந்ததாகவும் கூறுகிறார். மேலும், "உன்னுடைய விவாகரத்து முடிந்தவுடன் ஒரு பெரிய கோடீஸ்வர குடும்ப பெண்ணை பார்த்து நான் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்" என்று பெருமையாக பேசுகிறார்.
சிக்கப்போகும் மனோஜ்
விஜயாவுக்கு உண்மை தெரியாமல் இருப்பதால் மனோஜ் தற்காலிகமாக நிம்மதி அடைந்தாலும், இந்த ரகசிய திருமணம் எப்போது வீட்டாருக்கு தெரியவரும் என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. விவாகரத்து கிடைக்கும் முன் இரண்டாவது திருமணம் செய்துள்ளது சட்டவிரோதம் என்பதால், கண்டிப்பாக மனோஜின் இந்த கல்யாண மேட்டர் ரோகிணிக்கு தெரியவர வாய்ப்பு உள்ளது. அது நடக்கும்போது மிகப்பெரிய சம்பவம் காத்திருக்கிறது. அதனால் இனி மனோஜுக்கு என்னென்ன சிக்கல் வரப்போகுது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

