- Home
- Tamil Nadu News
- வீக் எண்ட் விடுமுறை! சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை!
வீக் எண்ட் விடுமுறை! சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை!
வார இறுதி, தொடர் விடுமுறை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கம், உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்.

சிறப்பு பேருந்துகள்
சுப முகூர்த்தம், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்துகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் சில நேரங்களில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் தமிழக போக்குவரத்துத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நவம்பர் 14 (வெள்ளிக்கிழமை), 15 (சனிக்கிழமை) 16 (ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 340 பேருந்துகள்
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 340 பேருந்துகளும், நாளை அதாவது 15ம் தேதி சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகள்
அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகளும், நாளை அதாவது 15ம் தேதி சனிக்கிழமை 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து இன்று மற்றும் நாளை 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த பயணிகள்
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வார இறுதியில் அதாவது இன்று 7,227 பயணிகளும் நாளை 2,975 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
மொபைல் ஆப் மூலம் முன்பதிவு
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.